நாட்டுக்கோழி சூப் நண்டு ரசம்னு சத்தா சாப்பிடுங்க கொரோனா போன்ற எந்த நோயும் வீட்டு வாசலுக்கு கூட வராது
சத்தான உணவுகள் பழங்கள், காய்கறிகள்,அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை இவ்வேளையில் எடுத்துக்கொள்ளலாம்.
சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகள், நாட்டுக்கோழி, சிக்கன், மட்டன் உணவுகளை அதிகம் சாப்பிடலாம். எங்கள் கிராமத்தில் தினசரியும் நாட்டுக்கோழி சேர்த்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் காய்ச்சல், சளி வந்தாலும் உடனே சரியாகி விடுகிறது. இதுவரைக்கும் கொரோனா என்று ஒருவரும் மருத்துவமனைக்கு சென்றதில்லை. எங்கள் வீட்டிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு காரசாரமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகிறோம்.
கொரோனா அதிகம் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம். எனக்கு கூட உடல் அசதி, காய்ச்சல் ஏற்பட்ட போதும் நாட்டுக்கோழி சூப், நண்டு மசாலா உணவு என கார சாரமாக சாப்பிட்டு காய்ச்சலில் இருந்து மீண்டு எழுந்தேன். உடல் வலியும் அசதியும் இரண்டு நாட்களில் ஒடியே போய் விட்டது.
சத்தான உணவுகள் பழங்கள், காய்கறிகள்,அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடந்த காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால், கபசுர குடிநீர், 2 முட்டை, வாழைப்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, சுண்டல், பயறு போன்றவைகளும், டிபன், சாப்பாடு போன்றவையும் தேவைக்கேற்ப வழங்கி குணப்படுத்தினர். இந்த சத்தான உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதோடு மருந்து, மாத்திரைகளால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமாகினர். இப்போதும் சத்தாக சாப்பிட்டால் எந்த நோயும் நம் வீட்டு வாசலுக்குக் கூட வராது என்ற சொல்லவே இந்த கட்டுரை.
கொரோனா பாசிட்டிவ் : மாரக தசை நடக்கல! கர்ம தசையும் இல்லை - ஜோதிடர் தந்த நம்பிக்கை வார்த்தைகள்
கறி, சிக்கன், மீன்
கொரோனா லாக்டவுன் காலத்திலும் கறி, மீன், சிக்கன் என்று கார சாரமாக சாப்பிடுகிறார்களே ஏன் இப்படி பலரும் யோசிக்கலாம். நோய் வந்த பின் வைத்தியம் செய்வதை விட வரும் முன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்களும், உணவியல் வல்லுநர்களும் கூறி வருகின்றனர். சம்பளத்துக்கே வழியில்லை சத்தாக எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்கலாம். இன்றைக்கும் காய்கறி கடைகள்,மட்டன், சிக்கன் கடைகளில் அதிகம் வாங்குவது சாதாரண ஏழை, நடுத்தர மக்கள்தான் தங்களின் சக்திக்கு ஏற்ப வாங்கி சாப்பிடுகின்றனர். அதையே சத்தானதாக சாப்பிட்டால் நோய் வரும் முன்பாகவே தடுத்து விடலாம்.
நோய் தொற்று காலம்
கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நாம் உண்ணும் உணவுப் பொருளுக்கும் ஒரு பிஎச் இருக்கிறது. பிஎச் என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் அடர்த்தியைப் பொறுத்து அமிலம், காரம் என்று வகைப்படுத்தப்படுகிறது. நாம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், உணவுகள் எல்லாம் தனித்தனியே காரம் அல்லது அமிலத்தன்மையைக் கொண்டதாக இருக்கும்.
காரமான உணவுகள்
இந்த கொடுந்தொற்று காலத்தில் காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகள், நட்ஸ் வகைகள், பருப்புகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
பழங்களில் ஆப்பிள், திராட்சை, மற்றும் சிட்ரஸ் வகைகளில் பொதுவாக அமிலத்தன்மை காணப்பட்டாலும் இவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
சூடாக சாப்பிடுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது என்பதால் ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எல்லா உணவுப் பொருள்களையும் சூடாக சாப்பிட வேண்டும்.
ரசம் சாதம்
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். தண்ணீரில் சீரகம், மிளகு கலந்து அருந்தலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்த கஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்த ரச சாதம் சாப்பிடலாம். சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கலாம். கிர்ணி, பப்பாளி, மாதுளை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அசைவ உணவுகள்
அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடலாம். வைத்தியருக்கு கொடுப்பதை வியாபாரிகளுக்கு கொடுக்கலாம் என்பார்கள். நம் வீடு தேடி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வரத் தொடங்கி விட்டன. இனி வரும் காலங்களில் மட்டன், சிக்கன், மீனும் வீடு தேடி வரலாம் எனவே சத்தானதாக சாப்பிடுங்கள்.
உங்களின் அனுபவம்
உங்களின் தினசரி உணவு அனுபவம், சத்தானதாக சாப்பிட்டு எப்படி கொரோனா வராமல் தற்காத்துக்கொண்டீர்கள் என்பதை எங்களுக்கு எழுதுங்கள். இந்த கொடுந்தொற்று காலத்தில் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உங்கள் கதைகள் நிச்சயம் அவர்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் அனுபவங்களை [email protected] மெயிலில் பகிருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். நம்பிக்கை தான் நம் வலிமை- கொரோனாவை வெல்வோம். இதுவும் கடந்து போகும்.