அண்ணாமலை “அறிக” -மதுரையில் “பொட்டல்காடு”.. இமாச்சலில் எய்ம்ஸை திறக்கும் மோடி! பாய்ண்டை பிடித்த சு.வெ
சென்னை: இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கும் நிலையில் உண்மையாக 95% கட்டுமானப்பணி நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் திறந்துவைப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா கடந்த மாதம் வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டபின் அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்.
2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல பிரதேசம் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!
நேரில் சென்ற எம்.பிக்கள்
உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பகுதிக்கு சென்று கட்டுமானப் பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டனர். ஏற்கனவே இருந்த செங்கல்லை கூட காணவில்லை என சு வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.
ஒப்பந்த புள்ளி
"உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்." என்றும் அவர் கூறி இருந்தார்.
இமாச்சல் எய்ம்ஸ்
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கட்டிமுடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இமாச்சல பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு செல்லும் பிரதமர் மோடி ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
சு.வெங்கடேசன் விமர்சனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், "உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.
அண்ணாமலை அறிக
அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. திரு ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை திரு.அண்ணாமலை அறிக." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.