அடுத்த சிக்கலில் மாரிதாஸ்.. பாய்ந்த புது வழக்கு.. மீண்டும் கைது!
பாஜக ஆதரவாளரான யூ டியூபர் மாரிதாஸை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பாஜக ஆதரவாளரான யூ டியூபர் மாரிதாஸை போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி ஆவணங்களை வைத்து செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Recommended Video
மோசடி வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட தகவலை சிறையில் உள்ள அவருக்கும், மதுரையில் உள்ள அவரது சகோதரர் மகேஷுக்கும் சென்னை சிசிபி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் எஸ்.ஏ. வீராசாமி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் என்பவர் கடந்த 10.07.2020 ஆம் தேதி தனது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடிபில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் மூத்த ஆசிரியர் வினய் சரவாகி அனுப்பியதாக மெயில் ஒன்றை வெளியிட்டார்.

மாரிதாஸ் மீது புகார்
நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகத்தின் மீது மாரிதாஸ் தரப்பு கூறிய புகார்களை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும், அது தனக்குக் கிடைத்த வெற்றி என்றும் மாரிதாஸ் கூறியிருந்தார். தான் அப்படியொரு இமெயிலை மாரிதாஸுக்கு அனுப்பவில்லை என்றும், போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டதாக சென்னை மாநகர குற்றப்பிரிவில் பத்திரிகையாளர் வினய் சரவாகி புகார் செய்திருந்தார்.

களங்கம் கற்பித்த மாரிதாஸ்
தனது பெயரில் போர்ஜரி செய்து ஒரு மெயிலை வெளியிட்ட மாரிதாஸ் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வினய் சரவாகி புகார் அளித்திருந்தார். நியூஸ்18 தமிழ்நாட்டில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் வினய் சரவாகி தெரிவித்திருந்தார்.

மாரிதாஸ் கைது
அவரை புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை மோசடி, கம்ப்யூட்டரை பயன்படுத்தி மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்திருந்தது. முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த அடுத்து, தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்று உள்நோக்கத்துடன் கருத்து பதிவு செய்ததற்காக மாரிதாஸை மதுரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மீண்டும் கைது
தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, நியூஸ்18 நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கைது செய்வதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.மோசடி வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட தகவலை சிறையில் உள்ள அவருக்கும், மதுரையில் உள்ள அவரது சகோதரர் மகேஷுக்கும் சென்னை சிசிபி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் எஸ்.ஏ. வீராசாமி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியில் பாஜக
மெயில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ், தேனி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட வழக்கில் தற்போது மாரிதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications