மதிக்கவே மாட்றாங்க! தேனியில் கொட்டித் தீர்த்த ர.ர.க்கள்! கண்டிப்பாக மாறும்..ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது முடிவெடுக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்களை அறிவித்தாலும், எந்தவித அதிகாரமும் தங்களுக்கு இல்லை என தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அவரது ஆதரவு நிர்வாகிகள் புலம்பித் தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எப்போது முடியும் என அவர்களுக்கே தெரியாது போல.. ஏன் அதனை தொடர்ந்து நடத்திவரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்குமே தெரியுமா என்பது தெரியவில்லை.
அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் போல இழுத்துக் கொண்டே செல்கிறது. நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணயில் இருக்கும் நிலையில், அதனையும் மீறி என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை கையில் எடுத்து தங்கள் அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஈபிஎஸ் அணியில் இருந்து வெளியேறும் 'முக்கிய’ தலை? எடப்பாடி மீது பயங்கர அப்செட்.. அதிமுகவில் சலசலப்பு!
அதிமுக நிர்வாகிகள்
தற்போதைய சூழலில் உச்ச நீதிமன்ற விசாரணையில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தனது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொள்வதற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்களை தனது பக்கம் இழுப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயன்று வருகிறார் அதில் ஒரு அளவு பலனும் கிடைத்தது. சில மாவட்டங்களில் எடப்பாடி அணியில் இருந்த ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள். ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்., சில பொதுக்குழு நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவளித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்
அதன்பிறகு உயர்நீதிமன்ற இரு உயர் நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வெளியானதால் ஓபிஎஸ் அணிக்கு செல்லும் நிர்வாகிகள் எண்ணிக்கை அப்படியே நின்று போனது. இதற்கிடையே தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களை மாவட்ட செயலாளராகவும், நகர், மாநகர செயலாளர்களாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அவர்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்றே கூறப்படுகிறது. அண்ணா பிறந்தநாள் எம்ஜிஆர் நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது மாலை அணிவித்தல் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆதரவு இல்லை
ஆனாலும் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளுக்கு வந்த கூட்டத்தில் பத்து சதவீதம் கூட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்களை அழைத்து வந்தே நிகழ்ச்சிகள் நடத்திய நிலையில் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் தனது சொந்த ஊரான தேனிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். அப்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் அவரை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றனர். அப்போது பலரும் குறைகளை தெரிவித்து இருக்கின்றனர்.
நம்பிக்கை
தீபாவளிக்கு ஓரளவு அவர்களை கவனித்து அனுப்பி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதே நேரத்தில் அதிமுகவில் தங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டால் நெருங்கிய வட்டாரத்தை தவிர வேறு யாரும் தங்கள் தரப்பிற்கு வரவில்லை எனவும் நிகழ்ச்சிகளில் கூட பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக புலம்பித் தீர்த்துள்ளனர். இதெல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னும் சிறிது நாட்களில் நினைத்தது நிறைவேறும் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.