அண்ணன் டிஜெ... புழல் சிறைக்கு வெளியே அதிர்ந்த முழக்கம் - ஜெயக்குமாரை மூழ்கடித்த ஆளுயர மாலைகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து இன்று வெளியே வந்த போது அண்ணன் டிஜெ வாழ்க என்று முழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை: மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து புழல் சிறையில் இருந்து விடுதலையான ஜெயக்குமாரை அவரது ஆதரவாளர்கள் ஆளுயர மாலைகளை அணிவித்தும் அண்ணன் டிஜெ வாழ்க என்று முழக்கமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Recommended Video
பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயக்குமாருக்கு ஜாமீன்
ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்
கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, திமுக பிரமுகரை தாக்கியது ஆகிய வழக்குகளில் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் அந்த வழக்குகளில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமின்
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் அங்கு உள்ள காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அண்ணன் டிஜெ வாழ்க
மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து 20 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த போது அவரை அதிமுக தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் ஆளுயர மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். விடுதலையான உற்சாகத்தில் அண்ணன் டிஜெ வாழ்க என்று உற்சாக முழக்கமிட்டு அதிரவைத்தனர். ஆள் உயர பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.












Click it and Unblock the Notifications