பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு என சந்தேகம்..சென்னையில் 4 இடங்களில் அதிரடி சோதனை
சென்னை: பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்திலும் ஏழுகிணறு பகுதியில் 2 இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் வெளியாகுமோ பகீர் தகவல்? சிக்கிய 6 பேரை காவலில் எடுக்கும் என்ஐஏ
வெளிநாட்டு கரன்சிகள்
சென்னையில் கடந்த வாரம் 4 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையை சேர்ந்த 4 பேரின் வீடுகளில், கடந்த 10ஆம் தேதி மாநகர போலீசார் சோதனை நடத்தினர்.
4 பேர் வீடுகளில் சோதனை
கொடுங்கையூரை சேர்ந்த முகமது தப்ரஸ், ஏழுகிணறை சேர்ந்த தவ்பிக் அகமது, மண்ணடியை சோ்ந்த ஹாரூன், வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா உள்ளிட்ட 4 பேரின் வீடுகளின் போலீசார் நவம்பர் 16ஆம் தேதியன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு உதவியதாக இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
சென்னையில் தேடுதல் வேட்டை
இந்த சோதனையில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரூன் ரஷித் என்பவர் வீட்டில் இருந்து ரூ. 4,90,000 , சீனக்கரன்சி ரூ. 1600 , தாய்லாந்து கரன்சி ரூ. 4820 , மியான்மர் கரன்சி ரூ. 50,000 மற்றும் மண்ணடி பகுதியில் உள்ள அவரது டிரேடிங் கம்பெனியிலிருந்து ரூ. 10,30,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல்
சோதனை நடந்த இடத்திலிருந்து 150 செல்போன்கள், லேப்டாப், அடையாள அட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மின்னனு பொருட்கள், லேப்டாப், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் இதுதொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், மின்னணு பொருட்களை தடயவியல் துறையினருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
4 இடங்களில் சோதனை
இதனிடையே இன்றும் சென்னையில் நான்கு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரின் வீட்டில் சென்னை மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏழுகிணறு பகுதியில் 2 இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.