பிடிஆர் தனிநபர்.. அவர் பேசியதை பத்தி ஏன் கேட்குறீங்க? திமுக எம்பி டிஆர் பாலு கருத்து- என்ன சொன்னார்?
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனி நபர், அவர் சொன்னதை பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று திமுக எம்பி டிஆர் பாலு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதியின் போது ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசலில் 5 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக சார்பாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக பெட்ரோல் விலையில் 3 ரூபாயை குறைத்தது. ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
சமீபத்தில் கூட, தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில வரியை மேலும் குறைக்க முடியாது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் 2014ல் இருந்து தொடர்ந்து உயர்த்தியது . அவர்கள்தான் இதன் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று பிடிஆர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆஹா..மறுபடியும் முதல்ல இருந்தா.. 32 வருஷ ஏக்கம்.. பாமக எடுத்த அதிரடி முடிவு.. பலிக்குமா ஆட்சி கனவு?
எம்பி டி.ஆர்.பாலு
இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எம்பி டி.ஆர்.பாலு பெட்ரோல் டீசல் விலை குறித்து நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் இந்த பேட்டிதான் விவாதம் ஆகியுள்ளது.
பேட்டியின் போது டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை? என்று நெறியாளர் எம்பி டிஆர் பாலுவிடம் கேட்டார். இதற்கு மத்திய அரசு ஏன் ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வரவில்லை. எல்லா பொருட்களுக்கும் ஜிஎஸ்டி போடுகிறார்கள். சிறிய சிறிய பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி போடுகிறார்கள். உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி போடுகிறார்கள். ஏன் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி போடவில்லை என்று டிஆர் பாலு பதில் அளித்தார்.
எம்பி டி.ஆர்.பாலு பேட்டி
இதையடுத்து கேள்வி எழுப்பிய நெறியாளர்.. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதை எதிர்க்கிறார். அதனால்தான் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்டார். அதற்கு, அவர் எதிர்க்கிறார்.. இவர் எதிர்க்கிறார் என்று சொல்லாதீர்கள் என்று இதற்கு டிஆர்பாலு பதில் அளித்தார். இதையடுத்து நெறியாளர், அவர் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர். தமிழ்நாடு அரசு சார்பாக பேசி உள்ளார் என்று குறிப்பிட்டார்.
பிடிஆர் எம்பி டி.ஆர்.பாலு
இதற்கு பதில் அளித்த டிஆர் பாலு, நான் கட்சியின் பொருளாளர். கட்சி பொறுப்பில் இருந்து நான் பேசுகிறேன். நான் கேட்கிறேன். ஏன் ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வரவில்லை. பிடிஆர் இப்போது வந்தவர். ஆனால் ஜிஎஸ்டி அதற்கு முன்பே வந்துவிட்டதே. அப்போதே போட்டு இருக்கலாமே. அவர் அமைச்சராகும் முன்பே ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோல் டீசலை கொண்டு வந்து இருக்கலாமே என்று கேட்டார்.
பழனிவேல் தியாகராஜன்
இதற்கு செய்தியாளர், அப்படி என்றால் தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோல் டீசல் கொண்டு வர உங்கள் கட்சி ஆதரவு தருகிறதா? என்று கேட்டார். இதற்கு டிஆர் பாலு, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அதை வாக்குறுதியாக கொடுத்துள்ளோம், என்றார். அதற்கு செய்தியாளர், பிறகு ஏன் அமைச்சர் பிடிஆர் எதிர்க்கிறார், என்றார்.
எம்பி டி.ஆர்.பாலு திமுக தேர்தல் அறிக்கை
இதற்கு டிஆர் பாலு, அவர் தனிநபர். அவர் சொன்னதை பற்றி ஏன் கேட்கிறீர்கள். சட்டமன்றத்தில்தான் இதை கேட்க வேண்டும். தேர்தல் அறிக்கை குழு தலைவர் நான்தான். தலைவர் சொல்லித்தான் ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோல் டீசல் கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் எழுதினேன். ஜிஎஸ்டி போட்டால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று டிஆர் பாலு கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை
மேலும் ஜிஎஸ்டியை எல்லா மாநிலங்களும் ஏற்க வேண்டும். அப்படி செய்தால் பிடிஆரும் ஏற்றுக்கொள்வார் என்று டிஆர் பாலு கூறினார். தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தனி நபர் என்று எம்பி டிஆர் பாலு கூறி இருப்பது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.