‘அட.. இப்படியும் ஒரு மேயரா?’ 10 நாளில் ரிட்டர்ன்.. அசத்தும் வசந்தகுமாரி - வாயில் விரல் வைத்த மக்கள்!
சென்னை : குழந்தை பெற்ற பத்தே நாட்களில் மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பியுள்ளார் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி. மக்கள் பணிகளில் அவரது ஆர்வத்தை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும், தாம்பரம் மாநகராட்சியில் பணிகளை ஆய்வு செய்து அதிரடி காட்டினார் மேயர் வசந்தகுமாரி. வளைகாப்பு முடிந்த மறுநாளே கை முழுக்க வளையல்களுடன் அவர் மக்கள் பணி ஆற்றியது தாம்பரம் பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மேயர் வசந்தகுமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 10 நாட்களில் மீண்டும் நேற்று காலை மேயர் வசந்தகுமாரி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது பணிகளை தொடங்கினார்.
அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணியினருக்கு பணி? - சென்னை மேயர் பிரியா சொன்ன பதில்!
தாம்பரம் மேயர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் பதவி வகித்து வருகிறார். இவர் தாம்பரம் பழைய 1வது வட்ட திமுக செயலாளர் கமலக்கணனின் மகள். 25 வயதில் இளம் மேயராக அரசியல் களத்திற்கு வந்தார் வசந்தகுமாரி பி.டெக் பட்டதாரியான வசந்தகுமாரி மீது தாம்பரம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் சிறப்பான முறையில் பணி செய்து வருகிறார்.
அதிரடி ஆக்ஷன் தான்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, அடிப்படை வசதிகளை செய்து தருவது, புகார்கள் வந்தால் உடனடியாக களைத்தில் இறங்கி ஆய்வு செய்வது என தீவிரம் காட்டி வருகிறார் வசந்தகுமாரி. இதனால், அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியாகவும் களப்பணி
கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மேயர் வசந்தகுமாரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சீமந்தம் முடிந்த மறுநாளே நிறை மாத கர்ப்பிணி என்று பாராமல் கை நிறைய வளையல்களோடு தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆச்சர்யப்பட்ட பொதுமக்கள்
இவர் ஆய்வுக்குச் செல்லும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களே, "நிறைமாத கர்ப்பிணியாக இருந்துட்டு ஏன்மா இப்படி அலையுற?" எனக் கேட்ட சம்பவங்களும் உண்டு, உடல்நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையிலும், அதிகாரிகளே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஓய்வெடுக்கச் சொல்லியும் களப்பணிகளில் இறங்கி அவர் செயல்பட்டதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
10 நாட்களில்
இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அதிகாலை சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மக்கள் பணிகளை கவனிக்கும் வகையில், குழந்தை பிறந்த 10 நாட்களில் மீண்டும் நேற்று காலை மேயர் வசந்தகுமாரி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது பணிகளை தொடங்கினார்.
பிரசவ காலத்தில்
பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட, விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்ற மேயர் வசந்தகுமாரி, குழந்தை பிறந்து பத்து நாட்களில் மீண்டும் மக்கள் பணியாற்ற மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். நேற்று மாநகராட்சி அலுவலகம் வந்த மேயருக்கு, அதிகாரிகளும், மாநகராட்சி பணியாளர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.