கதை கேளு.. கதை கேளு.. நிசமான கதைகேளு... தமாகா சைக்கிள் பஞ்சர் ஆன கதையை கொஞ்சம் கேளு!
Recommended Video
சென்னை: ஒரு காலத்தில் ஜிகே மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்துடன் தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் வலம் வந்தது. ஆனால் இன்று அவர் மகன் ஜிகே. வாசன் ஆரம்பித்த தமாகா இப்போது ஒரு தொகுதியில் சைக்கிளில் அல்லாமல், ஆட்டோவில் வலம் வருகிறது. அந்த கதையைத்தான் இப்போது பார்க்க போகிறோம்.
தமிழகத்தில் பெரிய கட்சியில் இருக்கும் தலைவர்கள், மனஸ்தாபத்தால் புதிய கட்சி தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது இயல்பான ஒன்று. அப்படி வெற்றிகரமாக நடத்தியவர்கள் ஏராளம்.
அந்த வரிசையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தியவர் ஜிகே மூப்பனார். ஆனால் அந்த கட்சி அவர் மறைந்த பின் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் ஐக்கியமானது. பின்னர் மீண்டும் 2014ம் ஆண்டு அவரது மகன் ஜிகே வாசனால் உதயமாகியது. ஆனால் இப்போது அந்த கட்சி தனது சின்னமான சைக்கிளை பறிகொடுத்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் ஒரே ஒரு தொகுதியில்...
மொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே!
மூப்பனார் செல்வாக்கு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஜிகே மூப்பனார். ராஜீவ் காந்தியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த இவருக்கு பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இருந்தது. ராஜிவ் மறைவுக்கு பின் அதிமுக 1991ம்ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய போது எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தான் இருந்தது. அந்த அளவுக்கு கட்சியை வலிமையாக வைத்திருந்தார் மூப்பனார்.
மூப்பனார் எதிர்ப்பு
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பெரும் எதிர்ப்பு அலை இருந்த சமயத்தில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவினை காங்கிரஸ் மேலிடம் எடுத்தது. இதனால் கொதித்து எழுந்த ஜிகே மூப்பனர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை 1996ம் ஆண்டு ஆரம்பித்தார்.
அதிமுக படுதோல்வி
அன்றை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம், அருணாச்சலம், தனுஷ்கொடி ஆதித்தன் உள்பட பல்வேறு தலைவர்கள் மூப்பனாருடன் சென்றார்கள். மூப்பனாரின் எழுச்சியை பார்த்த திமுக தலைவர் கருணாநிதி, அவரது தமாகா உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இந்த கூட்டணிக்கு ரஜினி ஆதரவு கொடுத்தார். இந்நிலையில் மிகப்பெரிய வெற்றியினை 1996ம் ஆண்டு தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி பெற்றது.
39 எம்எல்ஏக்கள்
1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சுமார் 25லட்சத்து 26 ஆயிரம் வாக்குள் பெற்று 39 தொகுதிகளை கைப்பற்றியது. இதேபோல் அப்போதே நடந்த ( 1996ம் ஆண்டு) 11வது மக்களவை தேர்தலில் சுமார் 73 லட்சத்து 39ஆயிரம் வாக்குகள் பெற்று மூப்பனாரின் கட்சி 20 மக்களவை தொகுதிகளை வென்றது. மூப்பனாருக்கு பிரதமராகவும் அப்போது வாய்ப்பு வந்தது.
3 தொகுதிகளில் வெற்றி
இந்நிலையில் 1998ம் ஆணடு நடந்த 12வது மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது அந்த கட்சி 51 லட்சத்து 65 ஆயிரம் வாக்குள் பெற்றது.
தமாகா தோல்வி
1999 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததால், அந்த கட்சியுடன் கூட்டணியை முறிந்து, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வில்லை. எனினும் சுமார் 29 லட்சத்து 46 ஆயிரம் வாக்குகள் பெற்றது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி.
அதிமுக கூட்டணி
2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அப்போது சுமார் 18 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் பெற்று 23 சட்டமன்ற தொகுதிகளில் மூப்பனாரின் கட்சி வெற்றி பெற்றது.
காங். உடன் இணைப்பு
இந்நிலையில 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். 2002ல் தமாகா அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து விட்டது. ஜிகே வாசன் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தார்.
ஜிகே வாசன் முடிவு
இந்நிலையில் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். அப்போது அவருடன் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு கூட்டணி ஜிகே வாசன் எடுத்த முடிவால் பல நிர்வாகிகள் கூட்டணியை விட்டு வெளியேறினர்.
தமாகா படுதோல்வி
2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் தமாகாவுக்கு ஜெயலலிதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் அங்கும் அந்த கட்சி இணையவில்லை. கடைசியில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்தது. இதில் தமாகா 26 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. 26 தொகுதிகளில் மொத்தமாக சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது.
தமாகா பரிதாபம்
இப்போது நடக்கும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தஞ்சாவூர் என்ற ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், தங்கள் சின்னமாக சைக்கிளை இழந்தது தமாகா. இப்போது ஆட்டோவினை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. 1996 இல் கம்பீரமாக இருந்த தமாகா இப்போது பரிதாப நிலையில் உள்ளது.