திமுகவுக்கு தாவும் "குல்பி.." இப்பவே கண்ணை கட்டுதே.. மளமளவென கரையும் ஜி.கே.வாசன் கட்சி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்க, ஜிகே வாசன், சுற்றுப் பயணத்தை துவங்கிய முதல் நாளிலேயே அவருக்கு குல்பி வடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் அவரது கட்சி, சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. தமிழக அரசியலில் ஏற்கனவே மிக சோர்வாக இருந்த த.மா.கா.வின் இரண்டாம் நிலை தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியால் மீண்டும் துவண்டு போய்விட்டனர்.
இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

வாசன் சுற்றுப் பயணம்
கட்சியிலிருந்து பலரும் விலகுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தன் கண் முன்னே கட்சி கரைவதை ஜீரணிக்க முடியாத நிலையில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்து தனது இருப்பைக் காட்டிக்கொண்டார் வாசன். மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக அறிவித்தார். நேற்று முதல் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பையும் ஆரம்பித்தார்.

குல்பி விலகல்
ஆனால் முதல் நாளே, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவையை சேர்ந்த தமாகா கொள்கை பரப்பு செயலாளர் குல்பி தங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
"தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார். எனவே, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்." என்று குல்பி தங்கராஜ் ஒரு குண்டை வீசியுள்ளார்.

கொ.ப.செ விலகல்
அது மட்டுமில்லை. குல்பி தங்கராஜ் விரைவில், திமுகவில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே பலரும் திமுகவில் இணைந்து விட்ட நிலையில் கட்சியின் கொ.ப.செவும் கழன்று கொண்டுள்ளதால் அதிர்ச்சியிலுள்ளார் ஜிகே வாசன். எதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும்; அரசியல் முடிவுகளையும் எடுக்க வேண்டும். இதை புரிந்துகொள்ளாதவராக இருக்கிறார் வாசன் என்ற புலம்பல்கள் கட்சியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

கட்சியை கலைத்துவிடுவது நல்லது
கட்சியில் ஏற்கனவே ஊருக்கு 4 பேர் தான் இருக்கிறார்கள். அதனால் இப்படி சுற்றுப்பயணம் செய்வதை விட்டுவிட்டு, கட்சியின் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி, கட்சியை கலைத்துவிட்டு உரிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் வாசனை நம்பியவர்களுக்கு நல்லது என்கிறார்கள் மூப்பனார் விசுவாசிகள்.












Click it and Unblock the Notifications