அதிகாரிகள் குமுறல்...அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகளை தவிர்க்கலாமே...ஈஸ்வரன் அறிக்கை!!
சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் மாவட்டங்களில் கொரோனா கட்டுகடங்காமல் பரவ காரணமாக அமைந்து விடும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், ''அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. நான்கு அமைச்சர்களுக்கும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் அந்த தொடர்பில் குறைந்தபட்சம் 4000 அதிகாரிகளுக்கும் கொரோனா நோய் தொற்று பரவியிருக்கிறது.
தனிமனித இடைவெளி ஒன்று தான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவோம். தமிழக முதல்வர் வேண்டுகோளும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அதை தான் அறிவிக்கிறது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்கள் கூடுகின்ற நிகழ்வை முழுமையாக தவிர்த்து இருக்கிறார்கள்.
முதல்வரும், தமிழக அமைச்சர்களும் மாவட்ட நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அடிக்கல் நாட்டுவதும், திட்டத்தை துவக்குவதுமாக உள்ளனர். இவை அனைத்துமே தவிர்க்கக் கூடியவை. தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பின்னால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி வந்திருக்கிறது.
கிராமப்புறங்களில் அந்த நிதியின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆங்காங்கு இருக்கின்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் களமிறங்கி இருக்கிறார்கள். அனைத்து திட்டங்களையுமே அமைச்சர்கள் தான் துவங்கி வைக்க வேண்டுமென்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு நாளும் 20 திட்டங்களுக்கு மேல் 20 இடங்களில் துவக்கி வைக்கின்ற நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.
அமைச்சர்கள் வருகிறார்கள் என்றால் அதிகமாக கூட்டம் கூடிவிடுகிறது. தனிமனித இடைவெளி எங்குமே கடைபிடிக்கப்படுவதில்லை. பெண்களை அதிகமாக கூட வைத்து ஆரத்தி எடுக்க வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தினசரி ஒளிபரப்பப்படுவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று பரவுகிறது. அந்த நிகழ்வுகளில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல அதிகாரிகள் வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இதன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தென் மேற்கு பருவகாற்றில் மாறுபாடு - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா
நோய் தொற்று பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கொரோனா பாதுகாப்பு பணிகள் தவிர மீதி எந்த பணிகளிலும் முதல்வரும், அமைச்சர்களும் ஈடுபடாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தமிழக முதல்வர் அத்தியாவசியமற்ற பணிகளில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று உத்தரவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியின் மூலம் நடைபெறும் திட்டங்களை துவக்குகின்ற நிகழ்ச்சியை அமைச்சர்களுக்காக காத்திருக்காமல் அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளே துவக்கி வைக்க அறிவுறுத்தலாம்'' என்று தெரிவித்துள்ளார்.