ஒரே நாடு - ஒரே மொழி -ஒரே ரேஷன் கார்டு -ஒரே வரி -ஒரே தேர்தல்.. பாஜக ஆட்சி பற்றி காங்கிரஸ் விளாசல்!
சென்னை: ஒரே நாடு - ஒரே மொழி -ஒரே ரேஷன் கார்டு -ஒரே வரி -ஒரே தேர்தல்.. என்ற இலக்கு மூலம் ஒன்றிய அரசு ஒற்றை குடையின் கீழ் அதிகாரத்தை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் சாடியுள்ளது.
மேலும், பாஜக அரசின் இந்தியை திணிக்கிற போக்கு இனியும் தொடர்ந்தால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஒரே குடையில்
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிற போக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நாடு - ஒரே மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே குடும்ப அட்டை, ஒரே வரி, ஒரே தேர்தல் என்ற இலக்கினை நோக்கி மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒன்றிய அரசு அதிகாரங்களை குவிக்கிற வகையில் மாநில அரசின் உரிமைகளை பறித்து வருகிறது.

உள்துறை அமைச்சகம்
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கிற முயற்சியாகவே இருக்கிறது. இதோடு பணியாளர் நியமனத் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதை கைவிட வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை இந்தியில் மொழி பெயர்க்க போதிய ஏற்பாடுகளை செய்தல், மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சக துறைகளின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஜவஹர்லால் நேரு
பண்டித நேரு அவர்கள் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியில், 'ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாகவும், மாற்று மொழியாகவும் மக்கள் விரும்பும் வரை தொடர்ந்து இருக்கும். இது எவ்வளவு காலத்திற்கு என்று தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்' என்று கூறியிருந்தார். இதற்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக ஆட்சி மொழிகள் சட்டம் 1967 திருத்தப்பட்டு, இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடர்ந்து நீடிக்க பல்வேறு வழிமுறைகள் செய்யப்பட்டன. பண்டித நேருவின் உறுதிமொழி என்பது இந்தி பேசாத மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமாகும்.

காங்கிரஸ் எச்சரிக்கை
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கடந்த 75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையை தகர்க்கிற விஷயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications