தமிழகத்தில் 5 நாட்களுக்கு கூல் கிளைமேட்தான்... 14ல் மழை அடி வெளுக்கும் - எங்கே தெரியுமா?
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி கூறியுள்ளது. அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அனல் சற்றே தணிந்து ஆங்காங்கே பெய்யும் மழையால் குளுமை பரவியுள்ளது. 14 ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
கடந்த 24 மணி நேரத்தில் நெடுங்கல், தேனி பெரியாரில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை கலெக்டர் அலுவலகம், CD மருத்துவமனை, தண்டையார் பேட்டையில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று காலை ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இது இன்று காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது. இது இன்று காலை 08:30 மணி அளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னலுடன் கனமழை
14ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பலத்த காற்று
நாளைய தினம் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications