உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள்.. மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
சென்னை : உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் மாணவர்களை மீட்பதற்காக 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒன்பதாவது நாள் தாக்குதலை நேற்று தொடங்கிய நிலையில் பத்தாவது நாளான இன்று தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
தலைநகரான கீழ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் பக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்பட்டது.

ரஷ்யா தாக்குதல்
துறைமுகங்கள் , மக்கள் வசிக்கும் கட்டடங்கள், ராணுவ மையங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும் வாகனங்கள் உதவியோடும் தொடர்ந்து வெளியேறி வரும் காட்சிகள் உலக அளவில் பேசு பொருளாக உள்ளது.

மாணவர்கள் மீட்பு
உக்ரைனின் பல பகுதிகளில் இன்னும் பல மாணவர்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. மேலும் 10 ஆயிரம் மாணவர்கள் அங்கு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. எல்லைகளில் தஞ்சம் புகுந்துள்ள மாணவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. இதுவரை பல கட்டங்களாக மாணவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நிதி ஒதுக்கீடு
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விமான பயண செலவு
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லிவரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடியும், மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் , சிறப்பு குழுவுக்கான பயணசெலவுக்கு ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.3.50 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications