அயல்நாடுகளில் தமிழை வளர்க்க தமிழ்நாடு அரசு செய்த தரமான செயல்! தமிழ் இருக்கைகள் அமைய எவ்வளவு செலவு?
சென்னை: அயல்நாடுகளில் தமிழை வளர்க்கும் நோக்கில் அங்குள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவிட தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய விவரம் அயலகத் தமிழர் திருநாள் விழா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் அயலகத் தமிழர் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அயலகத் தமிழர் நலன்
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கருத்தரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அயலகத் தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்று அயலக தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் கூறியதற்கும் மேலாகத் தமிழர்கள் இன்று உலகெங்கும் பரவி தமிழை வளர்த்து வருகிறார்கள். உலக நாடுகளோடு கொள்கொடை முறையில் தமிழ்மொழி வளர்ச்சியையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இவ்வாறெல்லாம் உலகின் பல நாடுகளில் புகழோடு விளங்கும் தமிழ்மொழியை பல நாடுகளிலும் வளர்ப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ் இருக்கைகள்
அயல்நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவிட நிதியுதவி செய்து வருகிறது. அவ்வகையில் மொரீசியஸ் நாட்டில் மகாத்மா காந்தி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் இருக்கை நிறுவிட ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் நடத்திய மூன்றாவது மற்றும் நான்காவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாடுகளுக்கு ரூபாய் முப்பத்து மூன்று லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய்
அமெரிக்கா நாட்டின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூபாய் பத்து கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நிதிப் பற்றாக்குறையால் மூடப்படும் நிலையில் இருந்த தமிழ்த்துறையைத் தொடர்ந்து செயல்படும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் ஒரு கோடியே இருபத்து ஐந்து இலட்சம் கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாயும் - 2022ஆம் ஆண்டில் இரண்டரை கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications