சாட்டையை சுழற்றிய கீதா ஜீவன்..குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை என அறிவிப்பு
சென்னை: குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
முன்னணி குழந்தை உரிமை அமைப்பு (குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள் (CRY)) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. "கடந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மற்றும் திண்டுக்கல் (குறிப்பாக கொடைக்கானல் பகுதி) மாவட்டங்களில் 10 பிளாக் மற்றும் 72 பழங்குடி குக்கிராமங்களில் குழந்தை திருமணம் பரவலாக உள்ளது" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இந்த ஆண்டு, கொரோனா பரவல் சமூக வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரியான நேரத்தில் தலையீடு செய்யாவிட்டால், குழந்தை திருமணச் சட்ட மீறல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சேலம், தருமபுரியில் அதிகம்
2019 மே மாதத்தில் சேலம் மாவட்டத்தில் 60 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இது 2020 மே மாதத்தில் 98 ஆக உயர்ந்தது. 2019 ஆம் ஆண்டில் சுமார் 150 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற தர்மபுரியில், 2020 மே மாதத்தில் 192 திருமணங்கள் நடந்துள்ளன. இந்த புள்ளி விவரம் ஊடகங்களில் வெளியான நிலையில்தான், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து சமூக நலத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
கொரோனா காரணம்
பின்னர், குழந்தை திருமண தடுப்பு குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 1098 அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கடுமையான தண்டனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கீதாஜீவன், குழந்தைகள் திருமணம் மற்றும் அந்தக் குழந்தைகள் திருமணத்தில் கலந்து கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
அதிகாரிகள்
இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் கவிதா ராமு மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.