செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு - தமிழக அரசு.. எந்தெந்த வகுப்புகள் தெரியுமா?.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 9-ம் தேதி அன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 23-ம் தேதி காலை 6.00 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வேகமாக குறைந்த கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்துள்ளது. இதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் தொற்று அதிகமாக இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் தடை
இந்த குழுவினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு?
இதேபோல் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதாவது செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் ஆலோசனை
இது தொடர்பாக பூர்வாங்க பணிகளை தொடங்க வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு தொடர்பாக அரசு நடத்திய ஆலோசனையில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கூறினார்கள்.

மருத்துவ கல்லூரிகள் செயல்படலாம்
அதன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிகள் மூடிக் கிடப்பதால் மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாவும், பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் அவர்களது கற்றல் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி துறை சார்ந்த நிபுணர்கள் அரசிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications