டாக்டராக ஆசையா?.. எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாளாக இருந்த நிலையில் மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும்.
2022-23ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள இணையதள விண்ணப்பம் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலும் tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் மருத்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்தது.
இந்த நிலையில் அதனை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து அக்டோபர் 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 569 மாணவர்கள் மருத்துவம் படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்கான உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பிப்பது அவசியமாகும். மேலும் 6ம் தேதியோடு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடியவுள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறும் மருத்துவ கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications