எங்க இருக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாருங்க! பலத்த காற்று வீசும்! சென்னை உஷார்- வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் உருவாகி சென்னை அருகே கரையைக் கடக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது எங்கே இருக்கிறது என்பதற்கான வரைபடத்தை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் இருந்து சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
ஐந்து நாட்கள் தொடர்ந்த மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இந்த நிலையில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
தமிழ்நாடு வெதர்மேன்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அறிக்கைப்படி சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று சென்னையை கடக்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பான சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
காற்று வீச்சு அதிகம்
அவர் கூறுகையில், அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனென்றால் காற்றழுத்த மண்டலம் சென்னையின், கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நமது எல்லை பகுதிக்குள் வந்த பிறகு காற்றின் வேகம் குறையும். ஏனென்றால் பொதுவாக காற்றழுத்த தாழ்வு மண்டல வடக்கு எல்லையோரப் பகுதியில்தான் காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும்.
மரங்கள் விழ வாய்ப்பு உள்ளது
அடுத்த சில மணிநேரங்களுக்கு பெருமளவுக்கு காற்று வீசக் கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். மரங்கள் எளிதாக கீழே விழும் வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டிருந்தார். இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து மற்றொரு ட்விட்டர் பதிவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது எங்கே இருக்கிறது என்பது தொடர்பான வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறார்.
கன மழை பெய்யும்
மேலும், கடலோர பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கனமழை பெய்ய தொடங்கி இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டல மையப்பகுதி இப்போது இன்னும் மேற்கு நோக்கி நகர்கிறது. அப்போது கனமழை பெய்ய ஆரம்பிக்கும். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகியவை தற்போது நல்ல மழை பொழிவு பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
அத்தியாவசிய பொருட்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை, சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.