சுயசார்பைதான் பாரதி பேசியுள்ளார்.. இந்தியா அதைதான் செய்து வருகிறது.. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்
சென்னை: நாடு முழுவதும் பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாரதியின் கவிதைகளை திரட்டி பார்த்தால் அதில் சுயசார்பு இந்தியாவைதான் பாரதி பேசியுள்ளார். அதுதான் தற்போது நடந்து வருகிறது என இந்த நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
இந்தியாவில் சுதேசி உணர்வை உச்சநிலைக்கு கொண்டு சென்றதில் பாரதியாருக்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது கவனிக்கதக்கதாக உள்ளது.

சுதேசி உணர்வு
பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும் என நீடித்து. அதில் குறிப்பிடத்தக்கது சுயசார்ப்பு கொள்கை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடக்கூடியவர்களை காவல்துறையினர் தொடர்ந்து வேட்டையாடி வந்த நிலையில் இந்த எதிர்ப்பு பல்வேறு முறைகளில் வெளிப்பட தொடங்கியது. குறிப்பாக 1907ல் காங்கிரஸ் கட்சியின் சூரத் மாநாட்டிற்கு பிறகு இது வலுவடைய தொடங்கியது.

பாரதியின் பங்கு
ஏனெனில் இதற்கு பின்னர்தான் தமிழ்நாட்டில் வ.உ.சி கப்பல் போக்குவரத்தை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தொடங்கினார். இந்த போக்குவரத்தை தொடங்கியதில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பாரதிக்கு இந்த அதீத விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணமாக 1906ல் நடந்த வங்கப்பிரிவினைதான் என சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் சென்னை ஜன சங்கம் என்பதை தோற்றுவித்தார். சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு ஆகியவை இதன் முக்கிய குறிகோள்களாக கருதப்பட்டன.

மரியாதை
இப்பேர்ப்பட்ட விடுதலை போராட்ட வீரராக இருந்த பாரதியின் 101வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியின் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "பாரதியின் கவிதைகளை திரட்டி பார்த்தால் அதில் சுயசார்பு இந்தியாவைதான் பாரதி பேசியுள்ளார். அதுதான் தற்போது சாத்தியமாகி வருகிறது" என்று கூறினார்.

சுயசார்பு
மேலும், "சுயசார்பின் ஒரு பகுதிதான் தடுப்பூசி உற்பத்தியும். தடுப்பூசி நாம் உற்பத்தி செய்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்." என்று கூறினார். மேலும் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தற்கொலை தீர்வு கிடையாது. நீட்டை பொறுத்த வரை வேறு வழி உள்ளது, வாய்ப்புகள் உள்ளது. கல்வித்தரத்தை உயர்த்தி பொது தேர்வை எழுத மேம்படுத்த வேண்டும், இந்திய அளவில் பல தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கேற்றவாறு தமிழகம் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications