அரசியல் அறம், மானம், நேர்மை துளியும் இல்லாத...பாஜகவை வெளுத்த முதல்வர் ஸ்டாலின்! சரமாரி அட்டாக்
சென்னை: சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக வெளுத்தெடுத்துள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் திமுகவை இடைவிடாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் பாஜகவினர். திமுக அரசு மீதும் பல்வேறு புகார்களை பாஜக தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். பொதுவாக பாஜக தலைவர்களின் கருத்துகளை திமுகவும் அக்கட்சித் தலைவர்களும் கண்டுகொள்ளாமல் கடந்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவினரின் அத்தனை அவதூறுகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கிடையாது என தன் பாதையில் பயணிக்கிறார்.
நச்சு சக்திகள் காலூன்ற இடம் தரக்கூடாது..வெட்டி ஒட்டி பேச்சை வெளியிடுகிறார்கள் கவனம்..மு.க ஸ்டாலின்
ஆ.ராசா விவகாரம்
மூத்த திமுக தலைவரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி., மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என சொல்கிறது என சுட்டிக்காட்டிப் பேசினார். ஆனால் இதனையே தமிழ்ப் பெண்களை விபச்சாரிகள் என சொல்லிவிட்டார் ஆ.ராசா; தமிழ்த் தாய்மாரை இழிவுபடுத்திவிட்டார் ஆ.ராசா என்றெல்லாம் திசைதிருப்பிவிட்டது பாஜக. பல்வேறு போராட்டங்களையும் அக்கட்சியினர் நடத்தினர். ஆ.ராசாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இந்த விவகாரத்திலும் கூட திமுக தலைமை எதுவும் பேசவில்லையே என வம்பிழுத்தன சில சக்திகள்.
பெட்ரோல் குண்டு வீச்சுகள்
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் பாட்டில்கள் வீச்சு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கின்றன. இச்சம்பவங்களை யார் செய்திருப்பார்கள் என்பதில் தொடக்கத்தில் குழப்பம் அனைவருக்குமே ஏற்பட்டது. ஏனெனில் கடந்த காலங்களில் இந்துத்துவா அமைப்பினர் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசி அரசியல் லாபம் அடைய முயற்சித்து கைது செய்யப்பட்டனர். அதனால் அரசு தரப்பு அவசரப்படாமல் தீர விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதிலும் கூட திமுக அரசை விமர்சித்துதான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதவெறி நச்சு சக்திகள்
இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மிக நீண்ட, காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவின் பெயரை குறிப்பிடாமல், சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் என வெளுத்தெடுத்துள்ளார்.
பாஜகவுக்கு செம டோஸ்
மேலும் "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பாஜக குறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மவுனமாக கடந்து செல்கிறார் என்கிற எகத்தாள விமர்சனங்களுக்கு பொட்டில் அறைந்தார்போல பதிலடி தந்துள்ளார் இன்று! முதல்வரின் இந்த அறிக்கையை திமுக தொண்டர்களும் திராவிடர் இயக்க ஆதரவாளர்களும் மெச்சிப் போற்றி வருகின்றனர்.