'தமிழக மக்களுக்கு கிடைத்த அருமையான முதல்வர் மு.க.ஸ்டாலின்' நடிகர் வடிவேலு புகழாரம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் 'வைகைப்புயல்' வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாடு திரும்பினார்.
இதனை தொடர்ந்து சென்னையில் இவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அப்போது வடிவேலுவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
மணிப்பூர் தேர்தல்: ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை ஜன.4-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இதன்பின்னர் வடிவேலு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதால் வடிவேலுக்கும் ஓமிக்ரான் இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் கொரோனாவில் இருந்து வடிவேலு குணமடைந்தார்.
வடிவேலுக்கு கொரோனா
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின் போன் செய்து ஆறுதல் கூறியதாக நடிகர் வடிவேலு கூறினார். மேலும் மீம் கிரியேட்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த வடிவேலு முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
நல்ல சிகிச்சை அளித்தார்கள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' லண்டனில் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. விமானத்தில் வரும்பொதுதான் சற்று அறிகுறி தெரிந்தது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யபோது கொரோனா உறுதியானது. அங்குள்ளவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். அங்கு நல்ல சிகிச்சை அளித்தார்கள்.
முதல்வர் கொடுத்த தைரியம்
நான் மருத்துவமனையில் சேர்ந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக போன் செய்து நலம் விசாரித்தார். மக்களுடைய சொத்து நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள் என்று தைரியம் கொடுத்தார்., அவர் கொடுத்த தைரியம் என்னை விரைவில் குணமாக்கியது. உதயநிதி ஸ்டாலினும் போன் செய்து பேசினார்.
இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் போனில் பேசி, இதில் ஏதும் பயப்பட வேண்டாம். விரைவில் சரியாகி விடும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அருமையான முதல்-அமைச்சர்
இப்போது நலமுடன் உள்ளேன். முதல்வர் போன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு ஒரு அருமையான முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். இது மிகையல்ல; இதுதான் உண்மை. முதல்வர் ஸ்டாலின் நீடுடி வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். எல்லா துறைகளிலும் சரியான அமைச்சர்கள், அதிகாரிகளை முதல்வர் நியமித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபுவாக இருக்கட்டும்; காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவாக இருக்கட்டும் மா.சுப்பிரமணியனாக இருக்கட்டும் சரியான ஆட்களை நியமிக்கிறார் முதல்வர்.
உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செய்லபடுகிறார்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். எப்போதும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக செய்லபடுகிறார். ஓமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. எனவே மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். மக்கள் இந்த விஷயத்தில் அசால்டாக இருக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த பயப்பட க்கூடாது. நான் மூன்றாவது தடுப்பூசி பூஸ்டர் போட்டுளேன் என்று நடிகர் வடிவேலு கூறினார்.