கேரளா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பினராயி விஜயனுடன் சந்திப்பு.. என்ன காரணம்?
சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேரளா பயணத்தின் போது, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நல்ல நண்பர்கள் என்று பல்வேறு தருணங்களில் வெளிகாட்டியுள்ளனர்.
அண்மையில் மனோரமா செய்தி நிறுவன கருத்தரங்கில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும், தனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி இருந்தார். அதேபோல் மத்திய அரசை எதிரான கருத்து மோதல்களில் தமிழ்நாடு மற்றும் கேரளா முன்னிலையில் இருந்து வருகிறது.
எப்படிமா இருக்க? நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. நெகிழ்ந்த பெற்றோர்! சிறுமிக்கு கிடைத்த முகம்
தென்மண்டல கவுன்சில் கூட்டம்
இந்த நிலையில் மாநிலங்களின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படும்.
கேரளா பயணம் ஏன்?
அந்த வகையில், தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் செப்.3ம் தேதி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பினராயி விஜயனுடன் சந்திப்பு
இதனை ஏற்று தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செப்.2ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு அன்றைய தினம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய சந்திப்பு
இதனைத்தொடர்ந்து செப்.3ம் தேதி 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினமே சென்னை திரும்பவுள்ளார். கேரள முதல்வருடனான மு.க.ஸ்டாலினின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின்போது சில அமைச்சர்களும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.