"சின்ன சத்தம் கூட வரலயாமே".. மொத்தமாக கண்ட்ரோல் செய்யும் ஸ்டாலின்.. ஜெ ஸ்டைலில் ஆரம்பமே அதிரிபுதிரி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்து இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், மிகவும் கட்டுக்கோப்பாக முடிவுகளை எடுத்து வருகிறார். கிட்டத்தட்ட ஜெ ஸ்டைலில் அவர் முடிவுகளை எடுப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில், கருணாநிதியை தாண்டி கட்சிக்குள் பல முக்கிய தலைவர்களுக்கு வாய்ஸ் இருந்தது. கருணாநிதிதான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றாலும், பல உள்ளூர் தலைவர்கள் முடிவுகளை மாற்ற கூடிய சக்தி கொண்டவர்களாக இருந்தனர்.
ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் நிறுவனர் அஜித் சிங் கொரோனாவால் காலமானார்
எதிர்க்கட்சியினர் இவர்களை குறுநில மன்னர்கள் என்றும் கூட கிண்டல் செய்யும் போக்கு இருந்தது. ஆனால் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக கிட்டத்தட்ட ஜெ கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக போலவே மாறியுள்ளது.
மாற்றம்
தற்போது கிட்டத்தட்ட திமுக முழுக்க முழுக்க ஸ்டாலின் வைத்ததே சட்டமாக இருக்கிறது. வெற்றி வந்தால் தொண்டர்களுக்கு சமர்ப்பணம், தோல்வி என்றால் நானே பொறுப்பு என்பது போல மொத்தமாக ஸ்டாலின்தான் தற்போது கட்சியின் அனைத்து முடிவுகளையும் கட்டுப்படுத்துகிறார். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலிலும் கூட ஸ்டாலின் மிகவும் ஸ்டிரிக்ட்டாக இருந்தார்.
ஸ்டிரிக்ட்
கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியது, வேட்பாளர்களை தேர்வு செய்தது, பிரச்சார திட்டங்களை வகுத்தது என்று திமுக தலைவர் ஸ்டாலின்தான் முக்கிய முடிவுகள் அனைத்தையும் தனி ஆளாக எடுத்தார். ஆலோசனைகளை கேட்டுக்கொண்டார், பரிந்துரைகளுக்கு செவி மடுத்தார். ஆனால் இறுதி முடிவு என்னவோ முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவாகவே இருந்தது.
இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அதிமுகவின் ஜெ சொல்லை தட்ட ஆட்களே இருந்தது இல்லை. முன்னாள் அமைச்சர்கள் கூட, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அமைதியாகிவிடுவார்கள். அதேதான் தற்போது திமுகவிலும், ஸ்டாலின் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின் முடிவிற்கு கட்டப்படுகிறார்கள்.
அமைதி
வேட்பாளர் தேர்விலேயே திமுக மிகவும் சுமுகமாக முடிவுகளை எடுத்தது, பெரிய எதிர்ப்பு எங்கும் எழவில்லை. தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், தனது அமைச்சரவையை தேர்வு செய்து வருகிறார். கிட்டத்தட்ட முழு லிஸ்ட் ரெடியாகிவிட்டது. யார் அமைச்சராக போவது, யாருக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் பலருக்கு சென்றுவிட்டது.
மாற்றம்
இதில் சில இறுதிக்கட்ட மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும். இப்படி இருக்க இதுவரை அமைச்சரவை கிடைக்காதோ என்று எந்த உறுப்பினரும் கட்சியில் பிரச்சனை செய்யவில்லை. திமுகவில் அமைச்சரவை வேண்டும் என்று கூறி யாரும் பெரிதாக அழுத்தமும் கொடுக்கவில்லை. ஸ்டாலின் சரியான முடிவை எடுப்பார் என்று மாவட்ட செயலாளர்கள் தொடங்கி எம்எல்ஏக்கள் வரை எல்லோரும் கொஞ்சம் நம்பிக்கையாகவே இருக்கிறார்கள்.
எதிர்ப்பு
ஸ்டாலின் இதில் பலரின் பரிந்துரைக்கு செவி மடுத்து உள்ளார். பல மூத்த உறுப்பினர்களிடம் அமைச்சரவை தேர்வு செய்ய ஆலோசனை கேட்டுள்ளார். ஆனாலும் இறுதி முடிவு என்னவோ ஸ்டாலின் எடுப்பதுதான். இதுவரை திமுகவிற்குள் அமைச்சரவை தேர்வுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் எழவில்லை. எந்த பக்கத்தில் இருந்தும் சின்ன சத்தம் கூட வரவில்லை.
மாற்றம்
திமுக மொத்தமாக ஸ்டாலினின் சொல்லுக்கு கட்டுப்பட்டது போல மாறி இருக்கிறது. இது கண்டிப்பாக கட்சி ரீதியாக, ஆட்சி ரீதியாக ஸ்டாலினுக்கு பெரிய பலத்தை கொடுக்கும். அதிலும் கொரோனா காலத்தில் இக்கட்டான நேரத்தில் முதல்வராகும் ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகளின் இந்த ஆதரவும், கட்டுப்பாடும் மிக அவசியம். அந்த வகையில் திமுகவில் தற்போதைய நிலவரப்படி எல்லாமே ஆல் இஸ் வெல்தான்!