மூன்றே மாதங்கள் ரூ67 கோடி கொரோனா அபராதம் வசூல்.. எதற்கு பயன்படுத்தலாம்.. தமிழக அரசு திட்டம்தான் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் விதிமுறைகளை மீறியதாக மாநிலத்தில் சுமார் 67 கோடி ரூபாய், வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முறையாகப் பயன்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் கொரோனா 3ஆம் அலை கையை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது. அப்போது தேர்தல் பிரசாரங்களும் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
அப்போது முக்கிய தலைவர்கள் மாஸ்க்குகளைகூட அணியாமல் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காமல் பிரசாரம் செய்தனர். இதனால் வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவியது.

கொரோனா 2ஆம் அலை
ஒரு கட்டத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. சுமார் இரண்டு மாத தீவிர போராட்டத்திற்கு பிறகே வைரஸ் பாதிப்பு இப்போது மாநிலத்தில் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 4029 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எந்தவொரு மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 500க்கும் மேல் இல்லை. 10 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இரட்டை இலக்கிலேயே வைரஸ் பாதிப்பு உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் வைரஸ் பரவல் உச்சமடைந்த போது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை போலீசாரும் உள்ளாட்சி அமைப்புகளும் தீவிரமாகக் கண்காணித்தனர்.

அபராதம் வசூல்
மாஸ் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத நபர்களிடம் இருந்து அபராதங்களும் வசூலிக்கப்பட்டன. போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் என இரு தரப்பினரும் அபராதங்களை வசூலித்தனர். பெரும்பாலும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தனிநபர்களிடம் இருந்து போலீசாரும், நிறுவனங்களிடம் இருந்து உள்ளாட்சி அமைப்பினருமே அபராதங்களை வசூலித்தனர்.

சென்னையில் ரூ 3 கோடி
அப்படி சென்னை மாநகராட்சியில் மட்டும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத 5,907 நிறுவனங்கள் மற்றும் 29,096 தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து ரூ.3.18 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1.52 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரூ 67 கோடி
இப்படி கொரோனா 2ஆம் அலை சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டுதல்களை மீறியதாக 37.71 லட்சம் பேரிடம் இருந்து இதுவரை 67.17 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது முதல் அலை சமயத்தில் வசூலிக்கப்பட்ட 52 .78 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

கொரோனா 3ஆம் அலை
பொதுமக்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்ட இந்தத் தொகை எதற்குப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு தற்போது வரை அறிவிக்கவில்லை. கொரோனா 3ஆம் அலை இன்னும் சில மாதங்களில் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கும் நிலையில், இதைப் பயன்படுத்தி தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என்பதே மக்களின் விருப்பம். கொரோனா 3ஆம் அலை சிறார்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என வல்லுநர்கள் கூறும் நிலையில், அதற்கும்கூட இதனைப் பயன்படுத்தலாம்,

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த அபராதங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாகவே வசூலிக்கப்பட்டன. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் வசூலிக்கப்பட்ட அபராதங்களைக் கொண்டு அங்குத் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்யலாம். குறிப்பாக கொரோனா 2ஆம் அலை சமயத்திலேயே சில மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. 3ஆம் அலைக்கு ஆக்சிஜன் தேவை எந்தளவு அதிகரிக்கும் என்பதைக் கணக்கிட்டு அதன் இருப்பை உறுதி செய்யலாம்.

மாவட்ட வாரியாக நடவடிக்கை
மாநிலம் முழுவதும் ஒரே நடவடிக்கை என்பதைக் காட்டிலும் மாவட்டம் வாரியாக நடவடிக்கை கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பலனைத் தருகிறது என்பது கடந்த காலங்களில் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வசூலிக்கப்பட்ட அபாரதங்களைக் கொண்டு அந்தந்த மாவட்டங்களிலேயே தேவையான முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்தால் கொரோனா 3ஆம் அலை கையை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications