தமிழகம் மதசார்பற்ற மாநிலமாக இருப்பது எப்படி? சினிமாவை திராவிட இயக்கம் எடுத்ததால்தான்.. வெற்றிமாறன்!
சென்னை: சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் விளைவு தான் தமிழ்நாடு இப்போதும் மதசார்பற்ற மாநிலமாக நிலைக்க காரணம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொல். திருமாவளவன் குறும்பட ஆவணப்பட கலை திருவிழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், குறும்பட ஆவணப்பட கலை திருவிழா நிகழ்வு மிக முக்கியமானது. திருமாவளவனை சில சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளேன். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.

அசுரன் பட நிகழ்வு
முதல்முறையாக அசுரன் படத்திற்காக அவரை சந்தித்தேன். ஏனென்றால் அரசியல் ரீதியாக தவறாக எடுத்துவிடக் கூடாது என்பதால் அவரை சந்தித்து பேசினேன். அப்போது இதுபோன்ற பிரச்சினைகளை படங்களில் கதையாக பேசும்போது, எதனை கருப்பொருளாக கொண்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்.

திருமாவளவன் வழங்கிய ஆலோசனை
அப்போது அவர், தனி மனிதர்களால் சமூகத்திற்கு தீர்வு வரும் என்பதை சினிமாவில் சொல்லாதீர்கள். அந்த தவறை செய்துகொண்டே இருக்கிறீர்கள். அமைப்பாய் சினிமாவுக்குள்ளும், உங்களின் கதைக்குள்ளும் திரளுங்கள் என்று கூறினார். சில ஆலோசனைகளும் வழங்கினார். அதேபோல் அசுரன் படம் பார்த்துவிட்டு சில குறைகளையும் சுட்டிகாட்டினார் என்று தெரிவித்தார்.

திராவிட அரசியல்
தொடர்ந்து கலை என்பதே அரசியல் தான். அதேபோல் திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவு தான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாக இருக்கிறது. சினிமா என்பது எளிய மக்களை எளிதாக சென்றடையக் கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல்மயமாக்குவது முக்கிய விஷயம். மக்களை பிரபலிப்பதுதான் கலை.

அடையாளங்கள் பறிபோகும்
இன்றைய சூழலில், கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நமது அடையாளங்கள் பறிபோகும். வள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றுவதாக இருக்கட்டும் தொடர்ந்து அடையாளங்கள் மாற்றப்பட்டு வருகிறது. நாம் விடுதலைக்காக போராட வேண்டும் என்றால், நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் பேரணி
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக நடப்பதாக இருந்த முன்னெடுப்பு மிகமுக்கிய உதாரணம். அதுபோல் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications