தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
இன்று உள்ளாட்சி தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு தேர்தல் நடக்க உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
வழக்கு
அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதன்பின் வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது.
இன்னும் மூன்று வாரம்
இந்த நிலையில் இன்னும் மூன்று வாரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.
வேட்புமனுத்தாக்கல் எப்போது
வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும். வார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாள் ஜனவரி 11.
எங்கு தேர்தல்
டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.
இரண்டாவது
இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.
நேரடி தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.