நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விற்பனை விலை உயர்வு, தலைகீழ் ஆவின் -பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை : நேற்று தமிழக அரசு துறை நிறுவனமான ஆவின் விற்பனை செய்யும் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதற்காக பல தொழிற்சாலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வெண்ணை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

ஆவின் நிறுவனம்
இது தொடர்பாக அந்த சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," நெய் உற்பத்திக்கு மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக உயர்த்தாமல் இருந்து விட்டு, நெய் விற்பனை விலையை மட்டும் கடந்த மார்ச், ஜூலை மற்றும் தற்போது டிசம்பர் மாதம் என நடப்பாண்டின் 9 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு 115.00 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம்.

வெண்ணெய்
அதே சமயம் நெய் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்கும் வெண்ணெய் விற்பனை விலை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் கிலோவிற்கு 20.00ரூபாய் உயர்த்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் வெண்ணெய் விற்பனை விலையை உயர்த்தாமல் வைத்திருந்ததும், மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை உயர்த்தாமல் இருந்து விட்டு நெய் விற்பனை விலையை மட்டும் அடிக்கடி உயர்த்தி வருவதும் புரியாத புதிராக மட்டுமல்ல அதில் ஏதேனும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருக்குமோ..? என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

ஆவின் நிர்வாகம்
காரணம் எந்த ஒரு மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் மூலப் பொருட்களுடைய கொள்முதல் விலை உயராமல் அந்த மதிப்புக்கூட்டு பொருட்களின் விற்பனை விலையும் உயராது. அப்படியானால் நெய்க்கான மூலப்பொருளாக விளங்கும் வெண்ணெய் விலை உயர்த்தப்படாத சூழலில் நெய் விற்பனை விலையை மட்டும் 9 மாதங்களில் 3 முறை ஆவின் நிர்வாகம் எப்படி உயர்த்தியது..? என்கிற கேள்வியும் எழுகிறது.

விலை உயர்வு
கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக வெண்ணெய் விற்பனை விலையை உயர்த்தாத நிலையில், கடந்த 9 மாதங்களில் 3வது முறையாக ஆவின் நெய் விற்பனை விலை உயர்வை ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் நேற்று (16.12.2022) முதல் அமுல்படுத்திய நிலையில் தற்போது இன்று முதல் (17.12.2022) சமையல் வெண்ணெய் (500கிராம் விற்பனை விலை 250.00 ரூபாயில் இருந்து 260.00 ரூபாயாகவும்,) மற்றும் உப்பு வெண்ணெய் (500 கிராம் 255.00 ரூபாயில் இருந்து 265.00 ரூபாயாகவும்) கிலோவிற்கு 20.00 ரூபாய் உயர்த்தி அறிவித்து இந்த விலை உயர்வை இன்று (16.12.2022) முதல் உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆவின் நிறுவனம்.

கடும் கண்டனம்
பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை ஒவ்வொரு முறை உயர்த்தும் போதும் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களோடும், தனியார் பால் நிறுவனங்களோடும் ஒப்பீடு செய்யும் ஆவின் நிர்வாகமோ, பால்வளத்துறை அமைச்சரோ, தமிழக அரசோ ஆவினுடைய கட்டமைப்பை அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களான அமுல், நந்தினி மற்றும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்றோ.., அவர்களைப் போல உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பால் கொள்முதலுக்கான தொகையை நிலுவையின்றி வழங்கிடவோ.., ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யவோ..., தனியார் பால் நிறுவனங்களை விட ஆவினின் விற்பனை அதிகரிக்க பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான லாபத் தொகையை கணிசமாக உயர்த்திடவோ.., ஏன் முன் வரவில்லை..? என்பது நீண்ட காலமாகவே ஆவினில் தொக்கி நிற்கும் மில்லியன் டாலர் கேள்வியாகும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications