ஒரு பக்கம் நடுங்கும் உறைபனி..தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை..சட்டென்று மாறும் வானிலை
சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் மலைப்பகுதிகளில் இரவில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்துடன் கனமழை நின்று போய் விட்டது. இந்த ஆண்டு இயல்பான அளவுதான் மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டு பருவமழை குறைந்து விட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு குளிர் வாட்டி வதைக்கிறது. குளிருக்கு காரணம் இந்திய கடல் பகுதியில் நிலவும் லா நினா என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த 2 மாவட்டத்தில் உறை பனி.. பொங்கல் லீவுக்கு பின் கிளைமேட் எப்படி இருக்கும்! வானிலை மையம் தகவல்
இனி மழை இருக்காது பகலில் வெயிலும் இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டி வதைக்கப்போகிறது என நினைத்திருந்த நேரத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டலத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக (இன்று) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது.
நாளைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது.
22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்கும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை வாட்டி வதைக்கப்போகிறது என்று எதிர்பார்த்த நேரத்தில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி இறுதி வரைக்குமே பருவமழை பெய்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்திலேயே மழை குறைந்து விட்டது. மீண்டும் மழை பெய்யப்போவதாக வானிலை ஆய்வு மையம் ஜில்லென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.