சொல்ற குறையெல்லாம் சொல்லிவிட்டு.. கோ-ஆபரேஷன் செய்யலைன்னா எப்படி.. ஸ்டாலின் கவனிக்கனும்
சென்னை: சட்டசபைக்கு, வருகை தந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இன்று கொரோனா அல்லது காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே, செவிலியர்கள் உள்ளே அனுப்பி வைத்தனர். அதுவரை ஓகே.. ஆனால் சில உறுப்பினர்கள் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நைசாக நழுவி சென்றதை பார்க்க முடிந்தது.
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, தமிழக, சட்டசபைக்கு வரக்கூடிய உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே நுழையும்போது, சானிடைசரில் கையை கழுவிவிட்டு வருவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து இருந்தது.
ஆனால், எம்எல்ஏக்கள் யாருக்குமே மாஸ்க் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து, சில நாட்களுக்கு முன்பு திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார். மாஸ்க் கொடுக்காமல் எங்களை காலி செய்ய பார்க்கிறீர்களா, என்று அவர் கிண்டலாகவும், அழுத்தமாகவும் கேள்வி கேட்டு இருந்தார்.
பரிசோதனை
இந்த நிலையில் சட்டசபை வரக்கூடிய எம்எல்ஏக்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று காலை முதல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக செவிலியர்கள் சட்டசபை வாயிலில் நியமிக்கப்பட்டிருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் பல்வேறு எம்எல்ஏகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சில உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக கடந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு செவிலியர்கள் வற்புறுத்தி சோதனை நடத்த வேண்டியதாயிற்று.
டிமிக்கி தேவையா
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குறை கூறிய திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும்தான் இவ்வாறு டிமிக்கி கொடுத்தனர். ஒருபக்கம், போதிய முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று குறை கூறக் கூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு ஒரு நடவடிக்கையை அரசு எடுக்கும் போது, எஸ்கேப் ஆவது சரியா என்ற கேள்வி சாமானியர்களிடம் எழுந்துள்ளது.
பரவக்கூடிய வாய்ப்பு
சட்டசபை கட்டிடம் என்பதும் கிட்டத்தட்ட ஒரு திரையரங்கு போல, சுற்றிலும் சுவர்கள் மற்றும் ஜன்னல்களால் அடைத்து வைக்கப்பட்ட ஒரு இடம்தான். ஏசி வசதியும் செய்யப்பட்டு இருக்கும். எனவே யாருக்காவது நோய்த் தொற்று ஏற்பட்டால் அது மற்ற உறுப்பினர்களுக்கும் எளிதாக பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஈரான் நாட்டில் கூட அங்கு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கு கொரானா பாதிப்பு இருக்கிறது. ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு மாறிமாறி இதுபோல ஏற்பட்டுவிட்டது.
எஸ்கேப் சரியல்ல
இதையெல்லாம் கவனித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசின் சோதனைக்கு உட்படாமல் எஸ்கேப் ஆவது சரியான செயல் கிடையாது. எம்எல்ஏக்கள் தினமும் பல நூறு பொதுமக்களை சந்திக்க வேண்டிய ஒரு பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு என்றால் அது பொதுமக்களையும் எளிதாகச் சென்று சேர்ந்துவிடும்.
அறிகுறிகள்
கொரோனா வைரஸை பொறுத்த அளவில் பாதிப்பு ஏற்படும் அறிகுறி தெரிய வர சுமார் ஐந்து நாட்கள் ஆகக்கூடும். அதற்கு, பிறகுதான் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். அதற்குப் பிறகு, அவர் வேண்டுமானால் தனிமையான இடத்தில் இருந்துகொண்டு சிகிச்சையை பெற முடியும். ஆனால், அதற்கு முன்பு அவர் எந்தெந்த நபர்களைத் தொடர்பு கொண்டார்களோ, அவர்களுக்கும் வைரஸ் பரவி அதற்கான வாய்ப்புகள் இருந்து இருக்கக்கூடும்.