நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள தவறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பயிற்சி வகுப்பு
இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நாளை பயிற்சி வகுப்பு நடத்துகிறது.

200 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தல்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 27,812 பணியாளர்கள் தேர்தல் பணிக்காக தேர்வு செய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
மேலும், பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் நாளை குறுஞ்செய்தி அனுப்பப்படும் நாளை நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பணி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு சென்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

மீறினால் நடவடிக்கை
இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணியாணை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளத்தவறும் நபர்களின் மீது தேர்தல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications