சென்னை மக்களே உங்களுக்கு இன்று விடுதலை.. விடுதலை! மைக்ரோவேவ் ஓவனாகும் புறநகர் பகுதிகள்.. வெதர்மேன்
சென்னை: சென்னை மக்கள் கொளுத்தும் வெயிலிலிருந்து இன்று ஓய்வு பெறலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் அடித்து வெளுக்கிறது, வெயில் அடித்தாலும் தகிக்கிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கத்தரி வெயிலும் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இது தற்போது 29-ம் தேதி வரை நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அனல் அதிகம் வீசி வருகிறது. காலை 8 மணிக்கெல்லாம் வெயில் நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது. காலை முதல் மாலை 5 அல்லது 6 மணி வரை வெளியே செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த நேரத்தில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 108 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்த படியாக வேலூர், திருத்தணி, சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 107 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 105 டிகிரியும் கடலூர், ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் 104 டிகிரியும் , வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு மதுரை நகரம், நாகை, பாளையங்கோட்டை, சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், தருமபுரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் இந்த வெப்பநிலையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் காலை முதலே சென்னையில் அதிக வெப்பம் இருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலையில் 43 டிகிரியை தாண்டியது. கடல் காற்று உள்ளே நகர்ந்து சென்றுவிட்டது. இதனால் பொத்தேரி, மறைமலைநகர், ஒரகடம் பகுதிகளிலும் திருவள்ளூர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வெப்பத்தை தணித்தது. திருவள்ளூரில் மணவாளநகரில் நல்ல மழை பெய்தது. ஆனால் சென்னையில் மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு அதிக வெப்பத்திலிருந்து ஓய்வு கிடைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை முக்கிய நகரங்களில் அதாவது கடலுக்கு அருகில் உள்ள நகரங்களில் கடல் காற்று காலை 11 மணிக்கெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. இதனால் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததது.
இந்த நிலையில் தற்போது 35 டிகிரி சென்டிகிரேட்டாக வெப்பம் குறைந்துள்ளது. ஆனால் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தகிக்கும். 40 டிகிரி சென்டிகிரேட்டை விட அதிக அளவு தாண்டும். வேலூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரியை விட வெப்பநிலை உயரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications