சென்னைக்கு மிக அதிக கனமழை இருக்கு.. முன்ன பின்ன டைமிங் இருக்கும்.. ஆனால் கன்பார்ம்!.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை நிச்சயம் மிக கனமழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. இன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மேலும் காலை முதலே குளிர்ச்சியான காற்று வீசியது.
இந்த நிலையில் மாலையில் முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அமைந்தகரையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நாளை மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்று குவிதல்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றின் குவிதல் அதிகமாக இருப்பதாக அதிக மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும். இன்று இரவும் நாளை காலையும் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மழை
இந்த நிலையில் அக்டோபர் 31 முதல் 5 நாட்களுக்கு அதாவது நவம்பர் 4 ஆம் தேதி வரை அதிகளவில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கடலோர பகுதியில் மழை தொடங்கிவிட்டது. இரவு நேரம் செல்ல செல்ல காலை வரை மழையின் அளவு அதிகரிக்கும்.

4 மாவட்டங்களில் மிக அதிக மழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. கொஞ்சம் முன்ன பின்ன டைமிங் இருக்கலாம். ஆனால் கனமழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். மழை பெய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இரவு நேரத்தில் மேகக் கூட்டங்கள் தீவிரம் அடையும். அவ்வளவு எளிதில் சூரிய ஒளியில் இருப்பதை போல் மேகங்கள் விலகாது. எனவே மழையை பாதுகாப்பாக ரசியுங்கள் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு வேறு
இந்த மழை அப்டேட்டுகளுக்காக பலர் அவரை கிண்டல் செய்து கமென்ட் கூறி வருகிறார்கள். மேலும் சிலர் இங்க பெய்யுமா , அங்க பெய்யுமா, புதன்கிழமை என்ன நிலவரம் என கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில் மழை தொடங்குவதில் எப்போதுமே கால தாமதம் இருக்கும். 2015ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி எத்தனை பேர் டிரோல் செய்தீர்கள் என்பதை நினைவுகூறுங்கள். அன்றைய தினம் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே அந்த மழை வரலாற்றில் இடம்பிடித்தது. எனவே என்னை பாலோ செய்யும் புதியவர்கள் தீர்ப்பு கூறுவதில் இருந்து விலகியே இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications