ஸ்டெர்லைட் மாசு குறித்து ஆய்வு.. அதிரடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நடந்த ஆய்வு குறித்த அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நடந்த ஆய்வு குறித்த அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அங்கு தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில், 14 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பின் திடீர் என்று மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் இந்த முடிவிற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தங்கள் நிறுவனத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று வாதம் செய்தது.
ஆய்வுக் குழு
இந்த நிலையில் ஸ்டெர்லைட் மாசு குறித்து ஆராய தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த குழு அக்டோபர் 30ம் தேதி தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
என்ன செய்தது
இந்த குழு முதலில் ஸ்டெர்லைட் நிர்வாகிகள், ஊழியர்களிடம் விசாரித்தது. அதன்பின் ஸ்டெர்லைட் ஆலையில் சோதனை நடத்தியது. பின் மக்கள் கருத்துக்களை கேட்டது. அதன்பின் மண் மாதிரி, காற்று மாதிரிகளை சோதனை செய்தது. காற்று மாசு, நிலத்தடி நீர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட்டால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வு நடத்தப்பட்டது
அவகாசம் நீட்டிப்பு
இந்த ஆய்வை தொடர்ந்து தூத்துக்குடியின் பல பகுதிகளில் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் விசாரணை கால கெடுவை கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என விசாரணை குழு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. முதலில் அக்டோபர் 30ம் தேதியுடன் இக்குழுவிற்கு காலக்கெடு முடிவடைய இருந்தது. அதன்பின் அதை ஒரு மாதம் நீடித்து, நவம்பர் 30ம் தேதிவரை விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
சமர்ப்பித்தது
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய 4 நாட்கள் உள்ள நிலையில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள்ளது. காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு என்று இரண்டு தனித்தனி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.