அர்ச்சகர்கள் நியமனம்.. அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள்,பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு விதிகள் உள்ளது.

சிவச்சாரியர்கள்
இந்த விதிகளை எதிர்த்து,அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

புதிதாக வழக்கு
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மரபு மாறுகிறது
அதில், எட்டு குடும்பங்களிலும் மூத்தவர்கள் இறந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண், அடுத்த பூஜாரியாக நியமிக்கப்படுவார் என்றும், பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபுக்கு மாறாக வயது வரம்பு நிர்ணயிப்பது சட்டவிரோதமானது என கூறப்பட்டுள்ளது.

புதிய விதிகள் செல்லாது
மேலும், இந்து சமய அறநிலைய சட்டப்படி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரபுகளின் படி நியமனம் நடைபெற வேண்டும் என்பதால் இந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு ,ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு
விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications