ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிமுன் அன்சாரி கேள்வி!
சென்னை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் நீதியரசர் ஆதிநாதன் தலைமையிலான ஆணையம் இதுவரை எடுத்த முன் முயற்சிகள் என்ன என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வினவியிருக்கிறார்.
உடலாலும், உள்ளத்தாலும் வாடி வதங்கி வாழ்வின் எஞ்சிய காலங்களை அமைதியாக கழிக்க வேண்டும் என ஏங்கிடும் ஆயுள் சிறைவாசிகளின் உணர்வுகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பத்து ஆண்டுகள்
பத்து ஆண்டுகளை நிறைவு செய்த பிறகும்,தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது. பல ஜனநாயக சக்திகளும் இதற்கு ஆதரவாக திரண்டதால், இக்கோரிக்கை மக்கள் மயமாகியிருக்கிறது. கடந்த ஜனவரி 8, அன்று இக் கோரிக்கையை முன்னிறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆயிரக் கணக்கான மக்களுடன் கோவை சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தினோம்.

அரசியல் சாசனம்
அரசியல் சாசன சட்டத்தின் 161 வது பிரிவு இது குறித்து மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழக அரசின் நல்ல முடிவுக்காக 100 நாட்கள் காத்திருப்பது என்று அந்த போராட்டத்தில் பிரகடனம் செய்திருந்தோம். இன்றோடு 50 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. இவர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஆதிநாதன், தலைமையிலான ஆணையம் இதுவரை எடுத்த முன் முயற்சிகள் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

தமிழக முதல்வர்
அக்குழு முறையாக கூடி ஆலோசித்ததாக கூட தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இந்த ஆணையத்தை செயல்பட வைத்து,தமிழக அரசு இவ்விவகாரத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குரலற்ற அம்மக்களின் கண்ணீரையும், கனத்த கவலையையும் மனிதாபிமானத்தோடு அணுகி விரைந்து நீதி கிடைக்க உதவ வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

வாடி வதங்கி
உடலாலும், உள்ளத்தாலும் வாடி வதங்கி; வாழ்வின் எஞ்சிய காலங்களை அமைதியாக கழிக்க வேண்டும் என ஏங்கிடும் அவர்களின் உணர்வுகளை அரசு மற்றும் நீதித்துறைகளில் இருக்கும் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும், மனிதநேய அடிப்படையிலான இவ்விவகாரத்தில் கணிவு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications