அடுத்த 24 மணி நேரத்தில்.. இந்த 3 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்ட போகுது - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தென்காசியில் மழை
எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இங்கு வறண்ட வானிலை
நாளை பொறுத்தமட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுக்கிறது. கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.












Click it and Unblock the Notifications