வேளாண் சட்டங்களை கண்டித்து.. மே 26-ல் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.. தி.மு.க ஆதரவு!
சென்னை: மே 26-ம் தேதி விவசாயிகள் நடத்த உள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.
''எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
பீன்ஸ் 1 கிலோ ரூ.290, கேரட் 1 கிலோ ரூ.190.. லாக்டவுனால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. இந்த நிலையில் 26-தேதி நடக்கும் விவசாயிகளின் 'பந்த்'-க்கு தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக உள்பட 12 கட்சிகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.