என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு? திடீர் திடீரென முடங்கும் செல்போன் சேவை! மழை நேரத்தில் அவதியடைந்த மக்கள்!
சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மின்தடை மற்றும் தொடர்பு துண்டிப்பு காரணமாக சென்னை மாநகர் முழுவதும் செல்போன் சேவையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Recommended Video
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது.
நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறிய நிலையில், புயலுக்கு அசானி புயல் என பெயரிடப்பட்டது. அசானி என்றால் இலங்கையில் பெரும் கோபம் என்று அர்த்தமாகும்.

சென்னை மழை
இந்நிலையில் அசானி புயல் காரணமாக தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் கடுமையில் சிக்கித் தவித்த மக்கள் நள்ளிரவில் பெய்த மழையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

செல்போன் சேவை பாதிப்பு
இன்று காலையும் மழை தொடர்ந்த நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீரென செல்போன் சேவைகள் முடங்கின. முதலில் டவர் பிரச்சினை காரணமாக சிக்னல் கிடைக்கவில்லை என மக்கள் கருதிய நிலையில் இதே நிலை மாநகரம் முழுவதும் நீடித்தது. இதனால் அவசர தேவைகளுக்கு கூட மக்கள் ஒருவரையொருவர் பேச முடியாமல் தவித்ததோடு என்ன காரணம் என புரியாமல் அலை மோதினர். குறிப்பாக மழை நேரம் என்பதால் வெளியே சென்ற உறவினர்கள், குழந்தைகளின் நிலை என்ன ஆவது என்று கூட தெரிந்து கொள்ள முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சேவை மீண்டும் தொடக்கம்
மேலும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியில் பணிபுரியும் தங்கள் சக பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். சென்னை மாநகர் முழுவதும் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த செல்போன் சேவை பாதிப்பு நீடித்தது. தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டன. மின்தடை மற்றும் செல்போன் தொடர்புகள் துண்டிப்பு காரணமாகவே செல்போன் சேவை பாதிக்கப்பட்டது தெரிந்திருந்தால், இதுகுறித்து போர்க்கால வேகத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் செல்போன் சேவை மீண்டும் வந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications