வெடிக்கும் பிரச்சனை.. ஓபிஎஸ் இவ்வளவு அமைதி காப்பது ஏன்? எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
சென்னை : சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு கடும் எதிர்வினைகள் . எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருந்து வந்துள்ளது. ஆனால் எந்த ரியாக்சனும் இல்லாமல் அமைதியாக கடந்து வருகிறார். இந்த மௌனம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவார், சேர்க்கப்படமாட்டார் என்று ஒற்றை வார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்தால் பதில் அளிக்க முடியும். ஏனெனில் அவர் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். கட்சியின் முழு அதிகாரம் உள்ளவர்களில் ஒருவர்.
இரட்டை தலைமை உள்ள அதிமுகவில் முடிவுகளை எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் இல்லாமல் அறிவிக்க முடியாது என்பதால் தலைமை கழகம் முடிவு செய்யும் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்றார். ஆனால் சசிகலா தரப்புக்கு இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால் , எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலாவை அதிமுகவில் சேர்க்க துளியும் விருப்பமும இல்லை என்பது தான்.

அமைதி
எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வமோ இதுபற்றி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சசிகலா குறித்து பேசும் போதெல்லாம் அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறினார். அப்படித்தான் அண்மையில் மதுரையில் அளித்த பேட்டியின் போது கூறினார்.

சசிகலாவை ஏற்குமா
பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக வங்கி லாக்கரில் இருந்து அ.தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தங்கக் கவசத்தை ஒப்படைப்பதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் மதுரை வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது'' என்றார். அப்போது, சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.

கேபி முனுசாமி பதிலடி
இதற்கு உடனே எதிர்வினை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு என்றைக்குமே அதிமுகவில் இடமில்லை என்றார். முன்னதாக இதே கருத்தை தான் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார். மேலும் கேபி முனுசாமியும் கூறியிருந்தார். அதேநேரம் செல்லூர் ராஜு, ஜேசிடி பிரபாகரன் உள்பட தென்மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஓபிஎஸ் கருத்தில் தவறு இல்லை என்கிறார்கள். ஆனால் அதேநேரம் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று தென்மாவட்ட நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக கூறவில்லை. ஓபிஎஸ் கருத்துக்கு தென்மாவட்ட நிர்வாகிகள் பலர் ஆதரவாக உள்ளனர்.

பிரச்சனை வெடிக்குமா
இந்நிலையில் சசிகலா குறித்து நடக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து அமைதியாக உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். ஓபிஎஸ் மவுனம் கலைத்தால் மட்டுமே பிரச்சனை வெடிக்குமா அல்லது முடியுமா என்பது தெரியும் .
Recommended Video

என்ன கேள்விகள்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக அன்றைக்கு பேட்டியில் சொன்னார். இதைஏற்றுக்கொண்டு சசிகலா வர வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறாரா? அப்படி அதிமுகவில் இணைய வந்தால் ஓபிஎஸ் ஏற்க தயாராக உள்ளாரா என்ற கேள்விகள் எழுகிறது. இதேபோல் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் இன்று அவரை ஆதரிப்பாரா என்ற கேள்வி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உள்ளது. சசிகலா விவகாரத்தில் ஏற்பட்டு குழப்பம் தீர ஓ பன்னீர்செல்வம் தன் மௌனத்தை கலைத்தால் தான் தெரியும் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications