"வெட்கக்கேடு.." விழுப்புரம் கொட்டியாம்பூண்டி சம்பவம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டுக்கு இடம்கேட்டு மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய மறுத்த பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர இந்தியாவில் சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுடுகாடு அமைக்க இடம் இல்லை.
இதனால் சுடுகாட்டுக்கு நிலம் வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்துள்னர். இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உடலை அடக்கம் செய்ய மறுப்பு
இந்நிலையில் தான் அமுதா (65) என்ற மூதாட்டி 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரின் உடலை பொதுமக்கள் புதைக்கவில்லை. மாறாக உடலை வைத்து போராட்டத்தை துவக்கினர். சுடுகாட்டுக்கும் நிலம் வழங்கினால் தான் அமுதாவின் உடலை புதைப்போம் என கூறி அவர்கள் கூறி போராட்டத்தையும் துவக்கினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதையடுத்து அரசு அதிகாரிகள், போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் பேச்சை பொதுமக்கள் கேட்வில்லை. இதனால் போராட்டம் 2 நாட்களாக தொடர்ந்தது. வி சாத்தனூர் செல்லும் சாலையோரம் உடலை அடக்கம் செய்யவும், மே 26ல் நிரந்தர இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அவரது உடலை அடக்கம் செய்தனர்.

பாலகிருஷ்ணன் கருத்து
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி என்ற கிராமத்தில் அமுதா என்ற பட்டியல் ஜாதி பெண்ணின் உடை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது.

வெட்கக்கேடு
3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது. சுதந்திர இந்தியாவில் சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு. அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications