வட இந்தியர், தென் இந்தியர் இடையே வேறுபாடே இல்லை.. வரலாற்று ஆய்வாளர் ராஜ்வேதம் பேச்சு!
பிரிட்டிஷார் உள்ளிட்ட அந்நியர்களின் ஆதிக்கம், பிரிட்டிஷ் மிஷனரி, சுயநலவாதிகள், மார்க்சிஸ்டுகள் ஆகியோர் இந்திய வரலாற்றுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ராஜ்வேதம் கூறியுள்ளார்.
சென்னை: வட இந்தியர் - தென் இந்தியர் இடையே வரலாற்று ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை என்றும், திராவிடர், ஆரியர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது எனவும் வரலாற்று ஆய்வாளர் ராஜ் வேதம் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் வரலாறு பிரிட்டிஷாரால் திரித்து எழுதப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்தியாவின் பண்பாடே வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, இவரது இந்தக் கருத்தானது பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

ஆரியர் - திராவிடர் வேறுபாடு
நாட்டில் சமீபகாலமாக ஆரியர் - திராவிடர் ஆகிய இனக்குழுக்கள் குறித்த ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. பொதுவாக, வட மாநிலங்களில் வசிக்கும் சில குறிப்பிட்ட இன மக்களை ஆரியர்கள் என்றும், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வசிப்போரை திராவிடர்கள் என்ற பதத்திலும் அறியப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, பல வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதை ஆமோதிக்கின்றனர். அதே சமயத்தில், சில வரலாற்று ஆய்வாளர்கள் இதனை மறுக்கிறார்கள். அதாவது, ஆரியர், திராவிடர் என்ற தனித்தனி இனக்குழுக்கள் எல்லாம் கிடையாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

"வரலாற்றிலிருந்தே அகற்றம்"
அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் ராஜ் வேதம் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் வரலாறு பலராலும் மாற்றியும், திருத்தியும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பண்பாடு பழம்பெரும் பண்பாடு ஆகும். ஆனால், அந்த பண்பாடே வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் உள்ளிட்ட அந்நியர்களின் ஆதிக்கம், பிரிட்டிஷ் மிஷனரி, சுயநலவாதிகள், மார்க்சிஸ்டுகள் ஆகியோர் இந்திய வரலாற்றுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.

இந்திய வரலாறை எழுதியது யார்?
பண்டைய பாரதத்தின் புராதன வேதங்கள், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் பல வானியல் குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன. நம் முன்னோர்களும், வான சாஸ்திர அறிஞர்களும் வானில் கிரகங்கள் செல்வதை கவனித்து, அதுகுறித்த பல தகவல்களை அடுத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே தந்து சென்றுள்ளனர். அவை எல்லாமல் நூல்களாக எழுதப்படுவதற்கு முன்பே அதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இருந்தன. ஆரம்பகாலத்தில் நம் வரலாறு பிரிட்டிஷ் மிஷனரிகளால் எழுதப்பட்டது. பின்னர், மார்க்சிஸ்ட் வரலாற்று ஆசிரியர்கள், அதை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.

"ஆரியரும் இல்லை.. திராவிடரும் இல்லை"
இதன் காரணமாக நமது உண்மையான வரலாறு இன்று எங்கும் இல்லை. அதனால், என்னுடைய விருப்பத்தின் பேரில் உண்மையான வரலாறுகளை தேடி கண்டுபிடித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறேன். பல ஆய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையிலும், மரபு, மொழியியில், கலாச்சார ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. அது, வட இந்தியர், தென் இந்தியர் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான். அதனால் இங்கு யாரும் ஆரியரும் இல்லை, திராவிடரும் இல்லை. இவ்வாறு ராஜ் வேதம் கூறினார்.












Click it and Unblock the Notifications