'நம் அரசியல் இந்துக்களுக்கு எதிரானது அல்ல'.. சங்பரிவார் கும்பலைத்தான் எதிர்க்கிறோம் - திருமாவளவன்
சென்னை: நாம் இந்து மக்களுக்கு எதிராக பேசவில்லை. இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற சங்பரிவார் கும்பலின் நச்சு அரசியலை எதிர்க்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சமீப நாட்களாக இந்து மதத்தில் உள்ள சில கூறுகளை திமுக, விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இந்து மதத்தை விமர்சிப்பதாக பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

விளக்கம்
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து பேசிய திருமாவளவன், "நீதி மண்ணாக இருக்கிற தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு இடமில்லை. நாம் எந்த இந்துக்களுக்கும் எதிராக பேசவில்லை. இந்து மக்களின் நம்பிக்கை என்பது வேறு. ஆனால் இந்து மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி ஆதாயம் தேடுகிற சங்பரிவார் அமைப்பினர் வேறு. நாம் எதிர்ப்பது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலின் நச்சு அரசியலைத்தான். அவர்கள், இந்து மக்களிடம் இருக்கும் கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

நம்பிக்கை
இவ்வாறு செயல்படும் சங்பரிவாரின் அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று விமர்சிக்கப்படுகிறோம். இந்துக்கள் இல்லாமல் எந்தக் கட்சியும் இயங்க முடியாது. இந்து சமூகம் பெரிய சமூகம். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இஸ்லாமியர்களை போல, கிருத்தவர்களை போல இந்துக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கைக்குள் நாம் நுழையவில்லை, இந்நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கவில்லை.

வன்முறை
ஆனால் சங்பரிவார் செய்யும் அரசியல், சதி அரசியல். நாட்டை பாழ்படுத்துகிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான அரசியல். இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வாழும் இம்மண்ணில் அவர்களிடையே மோதலை தூண்டுகிற மோசமான அரசியல். காந்தியை கொன்ற, காமராஜரை கொல்ல முயன்ற, பாபர் மசூதியை இடித்த, ஒரே இரவில் 2,000 இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்கள்தான் இந்த சங்பரிவார் அமைப்பினர். மட்டுமல்லாது இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடியாக தொடர்புடையது இந்த சங்பரிவார் அமைப்பு.

அரசியல்
மாட்டுக்கறி சாப்பிட்டதாக இஸ்லாமியர்களை இந்த அமைப்பினர் படுகொலை செய்கின்றனர். இதற்கு பெயர்தான் 'பாசிசம்'. இதற்கு எதிரான அரசியல்தான் நம்முடைய அரசியல்" என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
சமீபத்தில் திமுக எம்பி ஆ.ராசா வர்ணாசிரமத்தில் சாதி அடுக்கு குறித்து கூறியுள்ளதை பேசியதற்காக இந்து மக்களுக்கு எதிராக அவர் பேசியதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராசாவுக்கு பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மிரட்டல் கூட விடுத்திருந்தார். இது போன்று தொடர்ந்து பாஜகவினர் தங்களது கருத்துக்களை திரித்துக் கூறுவதாக விசிக, திமுக, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்தே திருமாவளவன் விசிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications