குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகள்! வேங்கைவாசல் சம்பவத்தில் யாரும் கைதாகாதது வருத்தம்.. திருமாவளவன்
சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யபப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் பெரிய மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியிலிருந்து அந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொட்டியில் இருந்து வீடுகளில் பிடிக்கப்படும் தண்ணீரால் பலருக்கு உடல்உபாதைகள் ஏற்பட்டன. மேலும் தண்ணீர் நாளாக நாளாக துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சிலர் தொட்டியில் ஏதேனும் உயிரினம் இறந்து கிடக்கிறதா என பார்க்க தொட்டி மீது ஏறினர்.
பட்டியல் சமூக ஆணையங்கள் என்ன செய்யுது? ஏன் வேங்கைவயலுக்கு செல்லவில்லை? - திருமாவளவன் சுளீர் கேள்வி
அதிர்ச்சி
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொட்டியில் பார்த்த போதுதான் அதில் யாரோ மனித கழிவுகளை போட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் முறையிட்டனர். பின்னர் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவுடன் வந்த ஆட்சியர் கவிதா ராமு அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினார்.
இரட்டை குவளை
இதில் பின்னர் ஒரு டீக்கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் சோதனை நடத்தியதில் இரட்டை குவளை முறை இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த கடைக்காரரையும் அவரது மனைவியையும் கைது செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஒரு அய்யனார் கோயிலில் தங்களை காலம் காலமாக அனுமதிப்பதே இல்லை என பட்டியலின மக்கள் கவிதா ராமுவிடம் புகார் அளித்தனர்.
கவிதா ராமு
இதையடுத்து அவர்களை அழைத்து கொண்டு கோயிலுக்குச் சென்றார் கவிதா ராமு. அப்போது ஒரு பெண் சாமியாடி அவர்களை உள்ளே அழைத்து செல்ல கூடாது என்றார். உடனே அவரையும் கைது செய்ய கவிதா ராமு உத்தரவிட்டார். இதையடுத்து கோயில் நிர்வாகத்திடம் இனி பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவதை தடுக்க கூடாது என உத்தரவிட்டார்.
குடிநீர் தொட்டி
இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை யார் போட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நபரையும் கைசு செய்யவில்லை என்பதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில் வேங்கைவயல் சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
வேங்கைவயல்
வேங்கைவயல் கிராமத்திற்கு பட்டியலின ஆணையங்கள் செல்லாமல் இருப்பதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அநாகரீக செயலில் ஈடுபட்டவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை தேவை. தீண்டாமைக்கு எதிரான சிறப்பு படை பிரிவை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது.
தீண்டாமை
இந்திய அளவில் சாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் உள்ளது. இரட்டைக் குவளை போல் இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவையும் தவறானது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டைக் குவளை முறையை ஒழிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.