விஜய்யின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.. திருமாவளவன் கொடுத்த பகீர் வார்னிங்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலுக்காக முழு மூச்சோடு களமிறங்கியிருக்கும் நிலையில், விஜய் சில விஷயங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும், மீறினால் அவருடைய அரசியல் எதிர்க்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "விஜய் பெற்றிருக்கும் விசில் சின்னம், பல சுயேட்சை சின்னங்களில் அதுவும் ஒன்று. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

விஜய்க்கு அச்சுறுத்தல்
பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை எல்லாம் மறைமுகமாக பல்வேறு உத்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அப்படி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், பாஜகவினர் மறைமுகமான அழுத்தத்தை தருகிறார்கள், அல்லது அச்சுறுத்தி வருகிறார்கள் என்பது பலரும் யூகித்துச் சொல்லுகிற ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. அதிலே நானும் ஒருவர்.
விசாரணை வளையம்
அந்த அளவுக்கு விஜய்க்கு நெருக்கடியை பாஜக தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. விஜய் அப்படி அந்த நெருக்கடிக்கு ஆளாகி.. நிர்பந்தத்திற்கு ஆளாகி.. அந்த கூட்டணியில் இடம் பெறுவாரேயானால்.. அவருடைய அரசியல் என்பது கேள்விக்குறியாகிவிடும். அவரை மட்டுமின்றி, அவருக்கு வியூகத்தை வகுத்து தருகிற சில நபர்களையும்.. பாஜக விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துவதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
வெளிப்படையாக பேச வேண்டும்
எனவே, விஜய்யை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைக்க வேண்டும் என்கிற முயற்சி ஒருபுறம் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. அரசியல் தலையீடு குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருக்கிறது என்றால், விஜய் அதை வெளிப்படையாக பேசி இருக்க வேண்டும். ஆனால், அவர் மௌனித்திருக்கிறார்.
எதிர்க்காலத்திற்கு நல்லது
அவரை தடுப்பது எது என்கிற கேள்வி எழுகிறது? நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பாஜகவும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடியை தருகிறதா? என்கிற கேள்விக்கு விஜய் அவர்களால் மட்டும்தான் பதில் சொல்ல முடியும்.
ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பாஜகவையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.
பொய்யான தோற்றம்
அவர் வெளிப்படையாக, அதிகாரத்தில் பங்கு தருவதற்கு தயார் என்று அறிவித்த நிலையிலும்.. அவரோடு கூட்டணி சேர்வதற்கு கட்சிகள் தயங்குகின்றன. அப்படியெனில் அவருடைய நிலை, அரசியல் களத்தில் என்னவாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள்.. அவரிடையே ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். யாருடைய தயவும் இல்லாமல், எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல்.. கூட்டணி இல்லாமல்.. வெற்றி பெற்று விட முடியும், ஆட்சியை கைப்பற்றி விட முடியும், என்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை அவருக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications