பேரறிவாளன் விடுதலை ரொம்ப தப்பு.. இதனால் திமுக-காங். கூட்டணியில் விரிசலா? திருநாவுக்கரசர் விளக்கம்
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்திய நிலையில், இது குறித்து திருநாவுக்கரசு எம்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டிருந்தார்.
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
தன்னை விடுதலை செய்யக்கோரித் தொடர்ந்து வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இது போன்ற தீர்ப்பு அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்புக்குத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரம் பேரறிவாளனை விடுதலை செய்வது தவறு என்றே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
காங்கிரஸ் போராட்டம்
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய காங்கிரஸ் கட்சி, இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்தார். இன்று மாநிலத்தில் பல இடங்களில் வாயில் வெள்ளை துணியைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாகத் திருச்சி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது.
நிரபராதி இல்லை
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு எம்பி, "ஆளுநர் மீதான தவறினால், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. அதேநேரம் அவர் குற்றமற்றவர் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிரபராதி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை.
தவறான முன்னுதாரணம்
உச்ச நீதிமன்ற வரம்பிற்கு இந்த விடுதலை உட்பட்டதாக இருக்கலாம். சட்டப்படி சரி என்றாலும் தர்மத்தின் படி இது தவறு தான். பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கும் பலர் சிறையில் உள்ளனர். இந்த நேரத்தில் கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை உண்டாகும். கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால் எல்லா செயல்களையும் திறந்து விட வேண்டியது தவிர வேறு வழியிருக்காது.
கண்டனத்துக்குரியது
பேரறிவாளன் தவிர்த்த மற்ற 6 பேர் விடுதலையை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். இதையெல்லாம் விட அவர் விடுதலையானதைக் கொண்டாடுவது, திருவிழாவைப் போல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டனத்துக்குரியது.
கூட்டணி விரிசல்
காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இணக்கமாக இருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல். கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவிப்பதே அதிகாரப்பூர்வமானது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை வைத்து திமுக-காங்கிரஸ் இடையே யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. இது வேறு. கூட்டணி என்பது வேறு.
தொண்டர் ஆவேசம்
திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, மாவட்டத் துணைத்தலைவர் சிக்கல் சண்முகம் என்பவர், "கொலைகாரனை வெளியே விட்டதற்குக் கொண்டாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ்காரன் வயிறு எரியுது" என்று தொடர்ந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தார். அப்போது அவரை அமைதியாக இருக்கும்படி திருநாவுக்கரசு கூறினார். ஆனால் தொடர்ந்து அந்த தொண்டர் ஆவேசமாகப் பேசிக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த திருநாவுக்கரசு அந்த தொண்டரை அடிக்க சென்றார். பின்னர் அந்த நபரைச் சமாதானப்படுத்திய திருநாவுக்கரசு தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.