சீனுக்குள் சசிகலாவும் என்ட்ரி.. நேரம் வந்துவிட்டது.. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பேட்டி
சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியின் பக்கத்தில் நெருங்கிவிட்டோம். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சசிகலா பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சசிகலா இன்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது:-
பேனா நினைவு சின்னம்- மூளையை முடக்குவாதத்துக்கு அடமானம் வைத்தவர்,மங்குனி ஆமை- சீமானை வெளுத்த முரசொலி!
தனித்தனியாக இருந்தால்..
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியின் பக்கத்தில் நெருங்கிவிட்டோம். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைய வேண்டும் என்று தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இடைத்தேர்தலில் எனது நிலைப்பாட்டை பொறுத்தவரை கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள்.
கடலுக்குள் அமைப்பது நல்லது அல்ல
அதிமுக என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த மாதிரி தவறுகள் (பாஜக தலைவர்களை ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பது) நடக்காது. பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைப்பது நல்லது அல்ல. மீனவர்களை பாதிக்கும். காவல்துறைக்கு பெரிய சவாலாக அமையும் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்துகிறேன். சமாதி இருக்கும் இடத்திலேயே நினைவுச்சின்னத்தை அமைக்கலாம். இத்தனை அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்று ஒன்னும் கணக்கில்லை.
அரசுக்கு எங்கிருந்து வருகிறது
தமிழ்நாட்டின் நிதி நிலையை பார்த்து அதற்கேற்றவாறுதான் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிதி நிலை இல்லை என்று கூறி நிறுத்துகிறீர்கள். பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு மட்டும் ரூபாய் 81 கோடி தேவைப்படுகிறது. அந்த நிதி தமிழ்நாடு அரசுக்கு எங்கிருந்து வருகிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. இவ்வாறு சசிகலா கூறினார்.
பாஜகவின் நிலைப்பாடு
அதிமுகவில் இரு அணிகளும் தனித்தனியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளன. இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தை பாஜக தெரிவித்துள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.டி. ரவி, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்க வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் அதற்கு அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் கூறியுள்ளார்.
7ஆம் தேதி அறிவிப்போம்
அவரது கருத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அவர்களின் முடிவைப் பொருத்து வரும் 7ஆம் தேதி எங்களின் நிலைப்பாட்டினை அறிவிப்போம்" என்று கூறியிருந்தார். அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க பாஜக ஆர்வம் காட்டுவது வெளிப்படையாக தெரியவந்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவதற்கான நேரம் என்ற சசிகலாவின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.