ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டி? ஜிகேவாசனுடன், அதிமுக தலைவர்கள் திடீர் சந்திப்பு.. ட்விஸ்ட்!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி(தமாக) போட்டியிட்டது. இந்நிலையில் தான் மீண்டும் அந்த தொகுதியில் தமாக போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் ஜிகே வாசனுடன், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விரைவில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.
அதேபோல் அதிமுக சார்பில் இந்த தொகுதி ஜிகேவாசனின் தமிழ் மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு தமாக சார்பில் யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்எல்ஏவானார். யுவராஜா தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்
இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா எம்எல்ஏ கடந்த 4ம் தேதி திடீரென மரணமடைந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியான நிலையில் அதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விபரங்கள் வழங்கினார். மேலும் அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 27 ல் சட்டசபை தேர்தல்
அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் தற்போது பெரும் பேசும்பொருளாக மாறி உள்ளது. அதாவது திமுக இந்த தொகுதியில் போட்டியிடும் என தகவல் வெளியாகும் நிலையில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இது எது நடந்தாலும் கூட இருகட்சிகளும் பிரச்சனையின்றி தங்களது சின்னத்தில் போட்டியிடலாம்.

சிக்கலில் அதிமுக
மாறாக இந்த இடைத்தேர்தல் என்பது அதிமுகவுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. உட்கட்சி பிரச்சனையால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் கூட அதனை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இத்தகைய சூழலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஒன்றாக கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சாதகமாக தீர்ப்பு வருவதுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே ஓ பன்னீர் செல்வம் ஆதரவின்றி எடப்பாடி பழனிச்சாமியால் வேட்பாளரை அறிவித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடியும். வேட்புமனுத்தாக்கல் தொடங்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இது சிரமம் என கூறப்படுகிறது.

தமாகாவுக்கு வாய்ப்பு?
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மீண்டும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் தமாக வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுக்கள் பெற்றார். சுமார் 8,904 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசப்பட்டது. இருப்பினும் அந்த தேர்தலில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது இரட்டை இலை சின்னம் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் தான் தாமாகவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேவேளையில் அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடமாட்டார் என்றும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக அல்லது தமாகா இருகட்சிகளில் எது போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமாகா -அதிமுக ஆலோசனை
இதுதொடர்பாக ஜிகே வாசன் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் தமாக தலைவர் ஜிகே வாசனை, அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான டி ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து பேசினர்.

விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் அதில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஜிகே வாசன் கூறுகையில், ‛‛தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைதேர்தல் முக்கியமானது. அதிமுக பாஜக தமாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம்'' என்றார். இதன்மூலம் ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவா, தமாகாவா இல்லை பாஜகவா என்ற கேள்விக்கான பதிலுக்கு இன்னும் நாம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications