சேலம்: ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள்-சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சேலம்: சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரானா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . இந்த சிகிச்சை மையத்துக்கான ஆக்சிஜன், சேலம் இரும்பு உருக்காலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு தனி பைப் லைன் மூலமாக கொண்டு செல்லப்படும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன், தடுப்பூசிகள் பற்றாக்குறையை சரி செய்வதிலும் முனைப்பு காட்டுகிறார்.
மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து சேலம் சென்றடைந்தார். சென்னையிலிருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார்.
உருக்காலையில் இருந்து ஆக்சிஜன்
இதனையடுத்து சிறப்பு சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை எடுக்கும் முறை குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும் அவர் கேட்டறிந்தார். சேலம் உருக்காலையில் இருந்து சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சிறப்பு சிகிச்சை மையத்தை முழுமையாக நடந்து சென்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இடைவெளிகளுடன் படுக்கைகள்
இந்த மையத்தின் நுழைவாயில் பகுதியில், இரு இடங்களில் செவிலியர்களுக்கான தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மையத்தில் நுழைபவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதற்கு நுழைவு வாயில் முன்பாக தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மையத்தின் ஒவ்வொரு படுக்கைக்கும் 3 அடி இடைவெளி விட்டு, 10 வரிசைகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 5 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 500 படுக்கைகள்
இந்த மையத்தில் ஏ,பி, சி டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இது ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக ஆண்,பெண் கழிவறை, கைகழுவும் ஏற்பாடு, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள படுக்கைகளின் போடப்பட்டுள்ளதற்கு நடுவில் 8 அடி இடைவெளியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் மையத்தின் பின்புறத்திலும் அவசரகால நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உருக்காலையில் இருந்து தனி ஆக்சிஜன் லைன்
அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனியாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்துவதற்காக இரும்பாலை ஆக்சிஜன் உற்பத்தி களத்திலிருந்து சிகிச்சை மையம் வரை தனி பைப் லைன் அமைக்கப் பட்டுள்ளது. வெயில் மற்றும் மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வசதியும், அதற்கு மாற்றாக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார நிலையத்தில் ஆய்வு
மேலும் சேலம் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு வழங்கப்படும் தடுப்பூசி, சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.