கூட்டணிக்கு வாங்க கமல்.. அழைப்பு விடுத்த கே.எஸ்.அழகிரி.. திமுகவில் ஜெர்க்!
திமுக கூட்டணிக்கு வருமாறு கமலுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: இப்போதான் பொறுப்புக்கு வந்தார் கே.எஸ். அழகிரி.. அதுக்குள்ள திமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
கமல் கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே திமுகவுடன் ஒன்று சேர காத்திருந்தார். அதேபோல, திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் தன்னை அழைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தார். இதில் எதுவுமே நடக்கவில்லை.
திமுக கண்டுகொள்ளாததை பார்த்து பொறுமை இழந்த கமல், "திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைய கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி கூட்டணி உடையும் பட்சத்தில் வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று சொல்லி அதிர வைத்தார்.
சிலை திறப்பு
கூடவே, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெளிவாக சொல்லி விட்டார். அதனால்தானோ என்னவோ, ஸ்டாலின் கூட்டிய மேகதாது விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூட கமலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு கமலும் போகவில்லை.
மறைமுக கூட்டணி?
அதனால் கமலுக்கும், ஸ்டாலினுக்கும் விரிசல் வளர்ந்து கொண்டே வந்தது. எப்படியாவது கடைசிவரை திமுகவுடன் மறைமுகமாகவாவது கமல் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
கரை படிந்தவர்கள்
தனித்து போட்டி என்று சொன்னதுடன், "திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்திருக்கிறேன். ‘என் கரங்கள் சுத்தமானது. கரைபடிந்தவர்களுடன் கை குலுக்க முடியாது' என்று சொல்லி இன்னும் இரு கட்சிகளையும் கடுப்பேற்றி விட்டார்.
வாக்குகள் சிதறும்
இந்நிலையில், கமலுக்கு திடீரென காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது. புதிதாக நேற்று பொறுப்பை ஏற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். அவர் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற வாக்குகள்தான் சிதறும்' என்று தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட கருத்தா?
இது அழகிரியின் தனிப்பட்ட கருத்து என்று ஒதுக்கி விட முடியாது, ஏனெனில் பிரியும் வாக்குகளை குறி வைத்து பேசுவதால், கூட்டணி கட்சிகளும் இதனை உற்று கவனிக்க வேண்டியுள்ளது. மனதில் பட்டதையும், யதார்த்த நிலைமையையும் அழகிரி சொல்லிவிட்டாலும் இது திமுக தரப்புக்கு கொஞ்சம் எரிச்சலை தந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆழம் பார்க்கிறதா?
திமுகவைப் பொறுத்தவரை ரஜினி இப்போது அரசியலுக்கு வராததால் நிம்மதியாக இருக்கிறது. கமல் குறித்து அவர்களுக்கு உள்ளுக்குள் உதறல் இருக்கவே செய்கிறது. இதனால்தான் படு உஷாராக ஓரம் கட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அழைப்பு நிச்சயம் திமுகவுக்கு அதிருப்திய ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. அதேசமயம், அழகிரி மூலமாக திமுக கமலிடம் ஆழம் பார்க்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது.